SAG செல்லும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக மேஜர் தம்பத் நியமனம்

80

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 26 போட்டி நிகழ்ச்சிகளுக்கான சுமார் 600 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏழு இலங்கை வீரர்களுக்கு நேபாளத்தில் பொதுச் சாதாரணதரப் பரீட்சை

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் …..

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் ஓய்வுநிலை மேஜர் தம்பத் பெர்னாண்டோவை நியமிக்க தேசிய ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கைப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், இறுதியாக கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தார்.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பண்பாடான அணிக்கான கௌரவத்தையும் இலங்கை அணி பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், சாக் செல்லவுள்ள இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரிகளாக தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர் காமினி ஜயசிங்க, தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் உதவிப் பொருளாளர் சந்தன பெரேரா மற்றும் இலங்கை விமானப் படையின் விங் கொமாண்டர் ஷெரிக்கா சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் காமினி ஜயசிங்க, இறுதியாக கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இது இவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான நிதி விரயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மெய்வல்லுனர் உள்ளிட்ட ஒருசில விளையாட்டுக்களில் இடம்பெற்ற வீரர்களை குறைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக விளையாட்டுத்துறை அமைச்சிலிருந்து 32 பேர் கொண்ட குழுவொன்று நேபாளம் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக பரா மெய்வல்லுனரில் இலங்கை வீரர் தினேஷுக்கு வெள்ளிப் பதக்கம்

டுபாயில் நடைபெற்றுவரும் உலக பரா மெய்வல்லுனர் ……

இந்தக் குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக முத்துகல, விளையாட்டுத்துறை அமைச்சின் நிதிப் பிரிவின் பிரதானி உபாலி சமரசிங்க, விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அத்துடன், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக முத்துகல விசேட கடிதமொன்றை கடந்த 6 ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<