SLC இன் அழைப்பை மறுத்த மஹேலவுக்கு மெதிவ்ஸின் வேண்டுகோள்

1805

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளருமான, மஹேல ஜயவர்தனவுக்கு, இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த மூன்று வருடங்களாக பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், அதில் இரண்டு தடவைகள் குறித்த அணி சம்பியன் பட்டத்தை வென்றது. சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை, கிரிக்கெட் நுணுக்கங்களில் சிறந்த புரிதல் உள்ளவரான மஹேல ஜயவர்தன, உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு கிரிக்கெட் சபையிடமிருந்து அழைப்பொன்று விடுக்கப்பட்டது. எனினும் குறித்த அழைப்பினை மஹேல ஜயவர்தன மறுத்திருந்தார்.

ஜீவன் மெண்டிஸின் கனவு நனவான உலகக் கிண்ணம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய…

இதுகுறித்து மஹேல ஜயவர்தன சண்டே டைம்ஸ் ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கையில், “உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுமாறு எனக்கு அழைப்பொன்று வந்தது. ஆனால் எனக்கு வேறு கடமைகள் இருக்கின்றன. அதைவிடவும், கிரிக்கெட் சபை என்னிடம் கொடுத்துள்ள பணி என்ன என்பதையும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

காரணம், உலகக் கிண்ணத்துக்கான முழுமையாக அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட்டு விட்டது. இவ்வாறு எல்லாம் முடிந்த பின்னர் அணிக்கு என்னால் என்ன செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை” என்றார்.

அதேநேரம், குறித்த நேர்காணலின் போது, மஹேல ஜயவர்தன, அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்பில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த கருத்துகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதற்கு அஞ்செலோ மெதிவ்ஸும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

மெதிவ்ஸ் தொடர்பில் மஹேல ஜயவர்தன தெரிவிக்கையில், “நாம் மெதிவ்ஸிற்கு, அரசியலை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தோம். ஆனால், அணி எடுக்கவேண்டிய முடிவுகளை வெளியில் (கிரிக்கெட்டுடன் தொடர்பற்றவர்கள்) உள்ளவர்களை எடுப்பதற்கு மெதிவ்ஸ் அனுமதித்தார். அணி வீரர்களுடன் ஒன்றிணைந்து சரியான முடிவினை மெதிவ்ஸ் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர், வீரர்களுக்காக முன்வரவில்லை. இதனை நான் மெதிவ்ஸிடம் நேரடியாக கூறியுள்ளேன். அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இப்போது அவருக்கு எதிராக நான் முன்வைக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு இதுதான்.

இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டால், உதாரணமாக, அவர் வெளியில் உள்ளவர்களை முடிவுகள் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இவ்வாறு செயற்பட்டதன் மூலமாக அணியை எம்மால் பாதுகாக்க முடிந்தது. ஆனால், அது இலகுவான விடயமல்ல. அதற்கு திடமான மனிதராக இருக்க வேண்டும். முடிந்ததை செய்ய வேண்டும். நான் மெதிவ்ஸ் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், அவரால் குறித்த சூழ்நிலையை சிறந்த முறையில் கையாள முடியவில்லை.

இந்த உலகக் கிண்ணத்தை பொருத்தவரை அஞ்செலோ மெதிவ்ஸ்தான் இந்த உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியை வழிநடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் விட்டுக்கொடுத்துவிட்டார். அதற்கு காரணம் அவரே தான்” என கூறினார்.

இவ்வாறு மஹேல ஜயவர்ன கிரிக்கெட் சபை மேற்கொண்ட அழைப்பினை மறுத்துள்ளதுடன், மெதிவ்ஸ் தொடர்பிலும் கருத்துகளை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், குறித்த மஹேலவின் கருத்திற்கு பின்னர், அஞ்செலோ மெதிவ்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளதுடன், மஹேலவிடம் வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்துள்ளார்.

தனது பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவாக இருக்கும் திமுத் கருணாரத்ன

முதல் 10 ஓவர்களுக்குள் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெறுவதும், வீரர்களை…

“அனைவரது அக்கறைக்கும் எனது நன்றிகள். பலர் தங்களுடைய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். இதில் மஹேல ஜயவர்தனவும் தனது அபிப்பிராயத்தை பகிர்ந்துள்ளார். இதில் சில கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும், என்னுடைய முழு அவதானமும் தற்போது உலகக் கிண்ணத்தின் மீது உள்ளது. அதேநேரம், இவ்வாறான முக்கியமான தருணத்தில் மஹலே ஜயவர்தன, தன்னுடைய கிரிக்கெட் அனுபவம் மற்றும் ஊக்குவிப்பினை எமது அணிக்கு வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<