கொழும்பு மரதனில் கென்ய வீரர்களுக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

291
LSR Colombo Marathon

”கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன்” அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன் (LSR Colombo Marathon) ஓட்டப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கென்ய நாட்டைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் மீண்டுமொரு முறை தமது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

எனினும், இலங்கை சார்பாக போட்டியிட்ட வீரர்களான சுரங்க குணசேகர மற்றும் வேலு கிருஷாந்தினி ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டனர். எனினும், அரை மரதனில் ஆண் மற்றும் பெண்கள் பிரிவின் வெற்றிகளை கணவன்மனைவி ஜோடியொன்று பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

இராணுவ மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு மாகாண வீரர்கள் பிரகாசம்

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய…

இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்றுவருகின்ற ஒரேயொரு சர்வதேச மரதன் ஓட்டப் பந்தயமான LSR கொழும்பு மரதன் ஓட்டப் போட்டியில் 41 நாடுகளைச் சேர்ந்த 8,000க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போட்டியானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் நேற்று காலை (08) ஆரம்பமாகியது. 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட முழு மரதன் ஓட்டப் போட்டி தலாஹேனவிலும், அரை மரதன் ஓட்டப் போட்டி பேஸ் லைன் வீதியிலும் நிறைவு பெற்றன.

இதில் ஆண்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் கென்ய நாட்டு வீரர்களான ஜேம்ஸ் தல்லாம் (2 மணித்தியாலம் 23 நிமி. 37 செக்) முதலிடத்தையும், பீட்டர் கேட்டர் (2 மணித்தியாலம் 24 நிமி. 28 செக்) 2ஆவது இடத்தையும், அமொஸ் மெய்ண்டி (2 மணித்தியாலம் 25 நிமி. 43 செக்) 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் 4ஆவது இடத்தையும், இலங்கை சார்பாக முதலிடத்தையும் பெற்ற இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த சுரங்க குணசேகர, போட்டியை 2 மணித்தியாலம் 28 நிமி. 58 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

பெண்கள் பிரிவில் மேர்சி ரு (2 மணித்தியாலம் 59 நிமி. 46 செக்) முதலிடத்தையும் மார்கரெட் வென்குய எஞ்சுகுனா (2 மணித்தியாலம் 59 நிமி. 46 செக்) 2ஆவது இடத்தையும், எமிலி ஜெப்கொச் (3 மணித்தியாலம் 02 நிமி) 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட உட புசல்லாவையைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி போட்டியை 3 மணித்தியாலம் 06 நிமி. 59செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை வீரர்களில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த நிலையில் 4ஆவது இடத்தையும் பெற்ற அதேவேளை, மாத்தளையைச் சேர்ந்த கணபதி கிருஷ்ணகுமாரி இலங்கை சார்பாக 2ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த நிலையில் 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தேசிய மெய்வல்லுனர் வீரர் ருவன் பிரதீப்புக்கு 4 வருட போட்டித்தடை

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைக்கால போட்டித் தடைக்கு..

இந்நிலையில், அரை மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில், அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கையின் தேசிய சம்பியனுமான ஹிருனி விஜயரத்ன போட்டியை 2 மணித்தியாலம் 23 நிமி. 21 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். கென்ய வீராங்கனை நவ்ம் ஜெப்கோஸ்கெய் 2ஆவது இடத்தையும், இலங்கையின் டி லியனகே 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை ஹிருனி விஜயரத்னவின் கணவரும், வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவருமான லூயி ஓர்ட்டா பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 10 நிமி. 39 செக்கன்களில் நிறைவு செய்தார். இப்போட்டியில் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை இலங்கை வீரர்களான விஜித குமார மற்றும் சமன் குமார ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<