அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க

1729
ICC Twitter

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி கடந்த மூன்று வருடங்களாக அடைந்து வரும் பின்னடைவுக்கு முன்னணி வீரர்களின் ஓய்வு காரணமாகாது என இலங்கை அணியின் புதிய ஒருநாள் மற்றும் T20I  போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட் தொடரில் கிடைத்த …

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (03) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் தற்போதைய நிலைக்கு முன்னணி வீரர்களின் ஓய்வு காரணமாகுமா என்பதை விளக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர்,

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெற்று மூன்று வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. அதனால் அவர்களின் ஓய்வானது உலகக் கிண்ண தயார்படுத்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அத்துடன், உலகக் கிண்ணத்துக்காக அணியை மீள தயார்படுத்தவதற்கான காலமும் இதுவல்ல. அதற்கான காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது அணியில் யார் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளோம்

இலங்கை அணி இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், நாளைய தினம் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. எனினும், குறித்த தொடர்களின் இறுதிப் பகுதிகளில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டுள்ளமை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாலிங்க குறிப்பிட்டார்.

நாம் விளையாடிய கடைசி இரண்டு தொடர்களினதும் இறுதிப் பகுதியில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால், இந்த தொடரின் ஆரம்பத்தில் நாம் சிறப்பாக செயற்பட வேண்டும். உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் எமக்கு இந்த தொடரை தவிர்த்து 8 போட்டிகள் இருக்கின்றன. குறித்த 8 போட்டிகளும் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் ஆடுகள நிலைமைகளை கொண்ட மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன. இதனால் எம்மை குறித்த சூழ்நிலைக்கு தயார்படுத்திக்கொள்ள முடியும்

இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நேர்த்தியான இணைப்பாட்டத்தை லசித் மாலிங்க எதிர்பார்த்துள்ளாக தெரிவித்துள்ளார்.

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் …

எந்தவொரு போட்டியில் வெற்றிபெற வேண்டுமானாலும், எமது ஆரம்பம் நன்றாக அமைய வேண்டும். முக்கியமாக எமது ஆரம்ப வீரர்கள் முதல் 10 ஓவரில் ஆடுகள நிலைமையை அறிந்து, விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும். இவ்வாறு, சிறந்த ஆரம்பம் பெறப்படுமாயின், இன்னிங்ஸின் இறுதிவரை எம்மால் ஓட்டங்கள் பெறுவதை துரிதப்படுத்த முடியும்என்றார்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை (03) மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி நாளை காலை 6.30 இற்கு ஆரம்பமாகும்.