பங்களாதேஷுடனான T-20 தொடரில் குசலுக்குப் பதிலாக குசல்

1595

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான T-20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குழாமில் இருந்து குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக குசல் மெண்டில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

[rev_slider LOLC]

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு இடம்பெற்ற (இலங்கை, பங்களாதேஷ், ஜிம்பாப்வே) முக்கோண ஒரு நாள் தொடர் மற்றும் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் என்பவற்றை வெற்றிகொண்டது. இந்நிலையில், இந்த சுற்றுப் பயணத்தின் இறுதித் தொடரான பங்களாதேஷ் அணிக்கு எதிரான T-20 தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

>> பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

குறித்த தொடருக்கான இலங்கை T-20 குழாம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், முக்கோண ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான குசல் ஜனித் பெரேரா மீண்டும் T-20 அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 

எனினும், பின்னர் வெளியிடப்பட்ட மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்து அவர் குறித்த குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, T-20 குழாமுக்கு புதிதாக இணைக்கப்பட்ட வீரர்கள் பங்களாதேஷ் நோக்கி நேற்று (12) சென்ற நிலையில், குசல் ஜனித் அங்கு செல்லவில்லை.  

குசல் தனது முதுகில் ஏற்பட்டுள்ள வலியில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அவர் மேலும் சில காலம் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே, குசல் ஜனித் T-20 குழாமில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.