முதல்தரப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் சங்கக்கார

2079
Sanga Article Cover Photo

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, இந்த பருவகால கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னர்  முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்திலிருக்கும் குமார் சங்கக்கார, 2015ஆம் ஆண்டு  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெற்றார். தற்பொழுது இங்கிலாந்தின் சாரே கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வரும் நிலையிலேயே குமார் சங்கக்கார தனது ஓய்வு குறித்து பிபிசி  செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

இது குறித்து பிபிசியிடம் சங்கக்கார கருத்து தெரிவிக்கும்பொழுது, ”கிரிக்கெட் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் சிறந்த நிலையில் இருக்கும்போதே ஓய்வை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே நான் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் 4 நாட்களை கொண்ட போட்டியின் இறுதி ஆட்டமாகும். இன்னும் சில மாதங்களில் நான் 40 வயதை எட்டி விடுவேன். மேலும்,  இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு இறுதி தருணமாகவும் இது உள்ளது” என்றார்.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெற உள்ள T-20 போட்டிகள் வரை சாரே பிராந்திய கிரிக்கெட் கழகத்துக்காக குமார் சங்கக்கார ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுற இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பருவகால போட்டிகளுக்காக சாரே அணியில் இணைந்து கொண்ட சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 11 இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக 57 என்ற ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.

இவர் கடந்த வருட பருவகால போட்டிகளில் 1,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்த போதிலும், கடந்த வாரம் நடைபெற்றிருந்த மிடில்செக்ஸ் அணியுடனான போட்டியில் இரண்டு சதங்களை விளாசியிருந்தார். இவ்வாறான ஒரு நிலையில், எதிர்வரும்  செப்டம்பர் மாதமே தன்னுடைய முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை பெற சரியான தருணம் என சங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

”உண்மையில், தமது தகுதியை விட பெரிதாக நாம் நினைக்கின்றமை பெரிய தவறாகும். கிரிக்கெட் மட்டுமல்ல ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வு பெற வேண்டிய ஒரு தருனம் உள்ளது. குறித்த அந்த தருனத்தில் நாம் வெளியேறியாக வேண்டும். நான் மிகுந்த அதிஷ்டம் மிக்கவன். ஏனெனில், வேண்டியளவு கிரிக்கெட் விளையாடி விட்டேன். எனினும், வாழ்க்கையில் அதைவிட ருசிப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன” என்றும் சங்கா குறிப்பிட்டார்.

கிரிக்கெட் உலகின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்திலே சங்கா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பல கிரிக்கெட் வீரர்கள் லோர்ட்ஸ் மைதானத்தில் முதல்தர போட்டிகளிலிருந்து இவரைப் போன்றே கௌரவத்துடன் ஒய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், லோர்ட்ஸ் அரங்கில் உள்ள கிரிக்கெட் உலக ஜாம்பவான்களாகிய முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜெயவர்தனவின் உருவப்படங்களுக்கு அருகே, குமார் சங்கக்காரவின் உருவப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

அது குறித்து கருத்து தெரிவித்த சங்கக்கார, “இதை ஒரு பெரிய பாக்கியம் மற்றும் கௌரவமாக நினைக்கின்றேன். உண்மையில் அந்த ஓவிய கலைஞர் என்னை விட அழகாக ஓவியத்தை வரைந்துள்ளார் என்று  நினைக்கிறேன்” என நகைச்சுவையாகவே கூறினார்.

லோட்ஸ் அரங்கில் சங்கக்காரவின் உருவப்படம்
லோட்ஸ் அரங்கில் சங்கக்காரவின் உருவப்படம்

”லோர்ட்ஸில் நடைபெறவுள்ள எனது இறுதிப் போட்டியில் சதம் ஒன்றை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளேன். எனினும், பூஜ்யத்துக்கு ஆட்டமிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சதம் பெறுவது குறித்து நினைக்கக்கூடாது. சதம் பெற வேண்டும் என்றே நினைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து போட்டியின் தன்மையுடன் முயசிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

20,000 ஓட்டங்களைக் கடந்தது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான் பெற்றிருந்த ஓட்டங்களை மாத்திரமே அறிந்திருந்தேன். எனினும், குறித்த சாதனையை எட்டியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ள இலங்கைஜிம்பாப்வே இடையிலான ஒருநாள் போட்டிகள்

குமார் சங்கக்கார ஜூன் மாத இறுதியில், மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக செல்லவுள்ளார். அந்த நேரத்தில் அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் சாரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

19 வருடங்கள் கிரிக்கெட் உலகில் பிரகாசித்த குமார் சங்கக்காரவின் சிறப்பம்சமாக உள்ள அவருடைய கவர் டிரைவ் துடுப்பாட்ட முறைமை விரைவில் அஸ்தமிக்க உள்ளது.

எனினும், தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு T-20 போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னுள் இன்னும் அதிரடி ஆட்டமானது உயிரோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல விளையளாட்டு செய்திககளைப் படிக்க