சிறுவர் மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக தமிழ் பாடசாலைகள்

381

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும் இணைந்து நான்காவது தடவையாக ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளின் தரம் 5 ஆண்கள் பிரிவில் ஹட்டன் – கினிகத்தேன கனிஷ்ட வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, அக்கரைப்பற்று ஆண்கள் அரசினர் முஸ்லிம் பாடசாலை இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Photos : Kids’ Athletic Championship – Day 3

ThePapare.com | omalka erandeera | 13/03/2019 Editing..

இதன் பெண்கள் பிரிவில் கொட்டாவ தர்மபால கல்லூரி சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ள, கலப்புப் பிரிவில் எம்பிலிப்பிட்டிய விஜேரிய கனிஷ்ட வித்தியாலம் சம்பியனாகத் தெரிவாகியது. இதுஇவ்வாறிருக்க, தரம் 5 கலப்புப் பிரிவில் வவுனியா நொச்சியாமொடை வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதேநேரம், கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் குறித்த பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

தரம் 3, 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வருடத்துக்கான அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் கடந்த 09ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெற்றன.  

இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து தகுதிபெற்ற சுமார் 6,000 மாணவர்கள் பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுடன், இதில் தரம் 3ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும், தரம் 4ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும், தரம் 5ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>> பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனரில் 5,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்பு

இதுஇவ்வாறிருக்க, கடந்த காலங்களைவிட இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் தரம் 3 மற்றும் 5 ஆண்கள் பிரிவில் முறையே 293 மற்றும் 422 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஹட்டன்கினிகத்தேன கனிஷ்ட வித்தியாலயம் சம்பியன் பட்டங்களை வெற்றி கொண்டது.

இதில் அக்கரைப்பற்று ஆண்கள் அரசினர் முஸ்லிம் பாடசாலை தரம் 5 ஆண்கள் பிரிவில் பலத்த போட்டியைக் கொடுத்து இரண்டாவது இடத்தையும், தரம் 3 ஆண்கள் பிரிவில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.  

அத்துடன், தரம் 3 மாணவர்களுக்கான ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி கனிஷ்ட மத்திய கல்லூரி (7ஆவது இடம்), அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம் (8ஆவது இடம்) ஆகிய பாடசாலைகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றன.

அதே தரத்தில் பெண்கள் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் (4ஆவது இடம்), டயகம கிழக்கு மகா வித்தியாலயம் (6ஆவது இடம்), முல்லைத்தீவு விஸ்வநாதர் கனிஷ்ட வித்தியாலயம் (9ஆவது இடம்) ஆகிய பாடசாலைகளும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றன.    

இதேநேரம், தரம் 3 மாணவர்களுக்கான கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்பிரிவில் மலையக பாடசாலைகளான கொத்மலை ஆனந்த திஸாநாயக்க கனிஷ்ட வித்தியாலயம் இரண்டாவது இடத்தையும், ஹட்டன் க்ளீவேர்டோ தமிழ் வித்தியாலம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.  

2020 ஒலிம்பிக் தொடருக்கான வீரர்கள் அடைவு மட்டங்கள் வெளியானது

ஜப்பான் – டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள…

அத்துடன், குறித்த பிரிவில் கிளிநொச்சி நாச்சிக்குடா தமிழ் அரசினர் கலவன் பாடசாலை 4ஆவது இடத்தையும், கொத்மலை குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் 5ஆவது இடத்தையும், கிண்ணியா ஈச்சனித்தீவு விபுலானந்தா மகா வித்தியாலயம் 8ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.   

இதேவேளை, தரம் 5 கலப்புப் பிரிவில் 430 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட எம்பிலிப்பிட்டிய விஜேரிய கனிஷ்ட பாடசாலை முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 417 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வவுனியா நொச்சியாமொடை வித்தியாலயம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

குறித்த பிரிவில் நுவரெலியா மேல்நிலை கிரேன்ட்லி தமிழ் வித்தியாலயம் 4ஆவது இடத்தையும், மன்னார் ஈச்சலவாக்கை தமிழ் கலவன் அரசினர் பாடசாலை 5ஆவது இடத்தையும், கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இதன்படி கடந்த மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இம்முறைப் சிறுவர் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை விசேட ஆலோசகர் சுனில் ஜயவீர, நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<