பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் பந்து வரை போராடி ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துள்ளது

ஐதராபாத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை

ஐ.பி.எல். குவாலிபையர்-2 (Qualifier-2) போட்டி நேற்றைய தினம் பெங்களூரு…

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய மும்பை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக சிமன்ஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தைக் கொடுக்கவில்லை.

மும்பை அணி 10 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ் 3 ஓட்டங்களுடனும், பார்த்திவ் பட்டேல் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களம் இறங்கிய ராயுடு 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் ரோகித் சர்மாவும் 24 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதனால் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ஓட்டங்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா (10), கேவி. சர்மா(1) ஆகியோரும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க 79 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ்.

இதனால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் பின்னர் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தில் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டகள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் உனந்த்கண்ட், ஸம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் உனந்த்கண்ட் 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் திரிபாதி ஆகியோர் களம் இறங்கினர்.

மூன்றாவது ஓவரிலேயே 3 ஓட்டங்களுடன் திரிபாதி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் ஸ்மித் பொறுமையாக ஓட்டங்களை சேர்க்க, ரஹானே அதிரடியாக விளையாடி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரத்தோடு டோனி துடுப்பெடுத்தாட களம் இறங்கினார். ஆனால், 12 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்த அவர் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். மற்றொரு புறம் ஸ்மித் பொறுமையாக ஓட்டங்களை சேர்த்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

போட்டியின் 18ஆவது ஓவர் வரை பொறுமையாகவே விளையாடி வந்ததால் வெற்றி இலக்கு தள்ளிக்கொண்டே போனது. கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மிச்சல் ஜோன்சன் பந்து வீசினார்.

முதல் பந்தில் மனோஜ் திவாரி பந்தை பவுண்டரிக்கு விளாசினார். இதனால், 5 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இரண்டாவது பந்தில் திவாரி பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். அப்போது, 4 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.  

மூன்றாவது பந்தில் ஸ்மித்தும் பிடி கொடுத்து ஆட்டமிழக்க புனே அணியின் சம்பியன் கனவில் கல் விழுந்தது. 3 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

நான்காவது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. இதனால், 2 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் கிறிஸ்டியன் இரண்டு ஓட்டங்களை எடுத்தார். கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கிறிஸ்டியனினால் 2 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனால், ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி மூன்றாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது.  

அதிகபட்சமாக புனே அணியின் தலைவர் ஸ்மித் 51 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணியின் மிச்சல் ஜோன்சன் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் 129/8(20) – குணால் பாண்டியா 47(38), ரோஹித் சர்மா 24, ஜாதவ் உனந்த்கண்ட் 2/29, அடம் ஸம்பா 2/32, டேனியல் கிறிஸ்டியன் 2/34

ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் 128/6(20) – ஸ்மித் 51(50), ரஹானே 44(38), மிச்சல் ஜோன்சன் 3/26, பும்ரா 2/26

விருதுகள்

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்
குணால் பாண்டியா – மும்பை இந்தியன்ஸ் (47 ஓட்டங்கள்)

தொடரின் நாயகன்
பென் ஸ்டோக்ஸ் – ரைசிங் புனே சுப்பர் ஜெயிண்ட் (12 போட்டிகள் – 12 விக்கெட்டுகள்)

இந்த தொடரில் கண்ணியத்தோடு விளையாடிய அணி
குஜராத் லயன்ஸ்

அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் (ஆரென்ஞ் தொப்பி)
டேவிட் வோர்னர் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (641 ஓட்டங்கள்)

அதிக விக்கெட்டுக்ளைப் பெற்றவர் (ஊதா நிறத் தொப்பி)
புவனேஷ்வர் குமார் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (26 விக்கெட்டுகள்)

மிக விரைவாக அரைச்சதம் கடந்த வீரர்
சுனில் நரேன் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (15 பந்துகளில் 50 ஓட்டங்கள்)

அதிக சிக்சர்கள் அடித்த வீரர்
க்ளென் மெக்ஸ்வெல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

மிகவும் மதிப்புமிக்க வீரர்
பென் ஸ்டோக்ஸ் – ரைசிங் புனே சுப்பர்ஜெயிண்ட்ஸ்

வளர்ந்து வரும் வீரர்
பசில் தம்பி – குஜராத் லயன்ஸ்