இந்தியாவிலிருந்து சிறந்த வீரர்களாக செல்கின்றோம் – நிக் போதாஸ்

1673

இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள இலங்கை அணி மிகவும் சிறந்த முறையில் இத்தொடர் முழுவதும் விளையாடியதாகவும், உடல் ரீதியாக மாத்திரமல்லாது உளவியல் ரீதியாகவும் எந்தெந்த விடயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் எமது வீரர்கள் சிறந்த அனுபவத்தைப் பெற்றுகொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் நிக் போதாஸ் தெரிவித்தார்.

உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

தற்போதைய நாட்களில் கிரிக்கெட் விளையாட்டானது முழுதுமாக துடுப்பாட்ட…

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி 3 வகையான கிரிக்கெட் தொடர்களையும் இழந்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்குமிடையில் இறுதியாக இடம்பெற்ற T-20 தொடர் நிறைவடைந்த பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நிக் போதாஸ், உலகின் எந்தவொரு அணியும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினாலும், எதிரணிக்கு கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன என்றார்.

இலங்கை அணியின் தோல்வி குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இப்போட்டித் தொடர் மூலம் எமது வீரர்கள் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டனர். ஒரு கிரிக்கெட் வீரராக ஒரு படி மேலே சென்று சிறந்த கல்வியை, அனுபவத்தை இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் பெற்றுக்கொண்டுதான் இந்தியாவிலிருந்து செல்கின்றனர். இதன்பிறகு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எவற்றையெல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் அவர்கள் நன்கு அறிவார்கள். எங்களுக்கு திருத்திக் கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன.  

அதேபோல இந்தியாவிலிருந்து செல்கின்ற அனைவருக்கும் போட்டியென்றால் என்ன என்பது பற்றி நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். நாங்களும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், முதல் போட்டியில் மோசமாக விளையாடியிருந்தோம். 2ஆவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுலின் இணைப்பாட்டத்தால் எமக்கு பாரிய ஓட்ட இலக்கை துரத்திச் செல்ல வேண்டி ஏற்பட்டது. எனினும் 3ஆவது போட்டியில் இந்திய அணிக்கு சவாலைக் கொடுத்திருந்தோம்.  

இத்தொடர் மூலம் உலகின் முதல்நிலை அணி என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டனர். அதேபோல எமது வீரர்களும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக போதாஸ் தெரிவித்தார்.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பங்களாதேஷ் அணியுடன்…

இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் உலகின் முதல்நிலை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இலங்கை அணிக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் எனவும், அது எதிர்வரும் காலங்களில் இடம்பெறுகின்ற போட்டித் தொடர்களுக்கு சிறந்த பயனைக் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், இலங்கை அணி தமது அடுத்த சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ளது. இதுதொடர்பில் போதாஸ் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இத்தொடரில் நிச்சயம் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இவ்வாறான போட்டித் தொடரில் விளையாடுகின்ற வீரர்களுக்கு 2 சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒன்று பஸ்ஸிலிருந்து கீழ் இறங்குவது அல்லது சிறந்த வீரராக முன்னே செல்வது. ஓவ்வொரு தொடரிலும் கதாபாத்திரங்கள் உருவாகின்றன. அதன்பிறகு எந்த கதாபாத்திரம் சிறந்தது என தெரிவுசெய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக கடந்த ஜுலை மாதம் முதல் செயற்பட்டு வந்த நிக் போதாஸின் பயிற்றுவிப்பின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை முதற்தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்தி வரலாறு படைத்தது. எனினும், அவரது பயிற்றுவிப்பில் இலங்கை அணி 18 ஒரு நாள் போட்டிகளுக்கு முகங்கொடுத்து 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றியைப் பதிவுசெய்தது. அத்துடன், பங்குபற்றிய 7 T-20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் புதுவருடத்தில் புதுப்பொழிவுடன் களமிறங்கவுள்ள இலங்கை அணியின், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக மீண்டும் நிக் போதாஸ் செயற்படவுள்ளார்.