மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து

327
Iceland qualified for 2018 FIFA World Cup

கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து, அதற்கு 18 மாதங்களின் பின்னர் தற்பொழுது உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முதல் முறை தகுதி பெற்றுள்ளது.

கொசோவோ அணியுடன் திங்களன்று (09) நடந்த போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமே ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.

28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில்..

ஐரோப்பாவின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் I குழுவில் ஆடும் ஐஸ்லாந்து, அந்த குழுவில் முதலிடத்தை உறுதி செய்யவே கொசோவோ அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் கில்பி சிகட்சன் மற்றும் இரண்டாவது பாதியில் ஜொஹன் குட்முன்ட்சன் ஆகியோர்v போட்ட கோல்களால் ஐஸ்லாந்து அடுத்து ஆண்டு ரஷ்யா சென்று உலகக் கிண்ணத்தில் ஆடுவது உறுதியானது.

இதன்மூலம் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தெரிவான மிகச் சிறிய நாடாக ஐஸ்லாந்து வரலாற்றில் இடம்பிடித்தது. வெறும் 334,000 என்ற மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து உலகக் கிண்ணத்தில் ஆடும் ஒரு மில்லியனுக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரே நாடாகவும் பதிவாகவுள்ளது.

இதற்கு முன் 1.37 மில்லியன் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் மற்றும் டொபாகோ அணியே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற மிகச் சிறிய நாடாக இருந்தது. அந்த அணி 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆடியது.

ஐஸ்லாந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தனது 10 குழுநிலை ஆட்டங்களில் ஏழில் வென்றுள்ளது.  

இதேவேளை, ஜோர்ஜியாவுடனான போட்டியில் பதில் வீரராக வந்த அலெக்சாண்டர் ப்ரிஜோவிக் 74ஆவது நிமிடத்தில் போட்ட பரபரப்பு கோல் மூலம் செர்பிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக்கொண்டது.

செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் ஐரோப்பிய தகுதிகாண் சுற்றின் D குழுவில் முதலிடத்தை உறுதி செய்யவே செர்பிய அணி களமிறங்கியது.

ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு…

ஒரு சுதந்திர நாடான பின் செர்பியா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும். 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் ஆடிய செர்பியா கடந்த உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறவில்லை.

உலகெங்கும் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் அதிக நெருக்கடி கொண்ட பிரிவான ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தெரிவாகும் மொத்தம் 13 அணிகளில் ஏழு அணிகள் தற்போது தனது இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளன.

போட்டியை நடத்து ரஷ்யா தகுதிகாண் ஆட்டங்களில் விளையாடாமலேயே தனது இடத்தை உறுதி செய்து கொண்ட நிலையில் நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, ஐஸ்லாந்து, போலந்து, செர்பியா மற்றும் ஸ்பெயின் அணிகள் 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய மண்டலத்தின் குழு நிலை போட்டிகள் இன்றுடன் (10) முடிவுக்கு வருகிறன. இதில் மூன்று முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து அடுத்த உலகக் கிண்ணத்தை இழந்துவிட்ட நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் சுவிட்சர்லாந்து B குழுவில் முதலிடத்தை உறுதி செய்ய தீர்க்கமான போட்டி ஒன்றில் இன்று ஆடவுள்ளது. இதில் வெல்லும் அணி உலகக் கிண்ணத்திற்கு முன்னேற முடியும்.

அதேபோன்று A குழுவில் முதலிடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணி இன்று தனது உலகக் கிண்ண தகுதியை உறுதி செய்ய எதிர்பார்த்துள்ளது. பிரான்ஸ் இன்று தனது சொந்த நாட்டில் பெலாரஸை எதிர்கொள்கிறது.

ஐரோப்பிய மண்டலத்தில் ஒன்பது குழுக்களில் சிறந்த புள்ளிகளுடன் இரண்டாம் இடங்களை பெறும் எட்டு அணிகளுக்கு இடையில் வரும் நவம்பரில் பிளே ஓப் சுற்று போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதன்மூலம் மேலும் 4 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும். இந்த பிளோ ஓப் சுற்றில் ஆட இதுவரை அயர்லாந்து குடியரசு, டென்மார்க், குரோஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

2018, ஜுன் 14 தொடக்கம் ஜூலை 15ஆம் திகதி தவிர பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, கொஸ்டா ரிகா, சவூதி அரேபிய, தென் கொரியா, நைஜீரியா, எகிப்து அணிகள் உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளன.