அரிசோனா அரை மரதனில் இலங்கையின் ஹிருனிக்கு வெண்கலப் பதக்கம்

129

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற அரை மரதன் ஓட்டப் போட்டியில் (Mesa-Phoenix Half Marathon 2019) பங்குகொண்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய மரதன் ஓட்ட நட்சத்திரம் ஹிருனிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு வெற்றி

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட …

குறித்த போட்டியை நிறைவுசெய்ய ஒரு மணித்தியாலமும் 14.19 செக்கன்களை எடுத்துக்கொண்ட ஹிருனி, அரை மரதன் ஓட்டப் போட்டியில் தனது 2ஆவது அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார். அத்துடன், இலங்கை வீராங்கனையொருவர் அரைமரதன் ஓட்டப் போட்டியொன்றில் பதிவுசெய்த இரண்டாவது அதிசிறந்த காலமாகவும் இது பதிவாகியது.

அத்துடன், கடந்த வருடமும் இதே போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த அவர், போட்டியை ஒரு மணித்தியாலமும் 14.07 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்துடன் புதிய இலங்கை சாதனையும் நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இம்முறை போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்னி பேவர் (ஒரு மணி. 13.16 செக்.) தங்கப் பதக்கத்தையும், பிரித்தானியாவைச் சேர்ந்த ரோசி எட்வேட்ஸ் (ஒரு மணி. 14.13 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

இந்த நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வருவதாக ஹிருனி விஜேரத்ன தெரிவித்தார்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இளம் வீராங்கனை செல்ஸி மெலனி

இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் ….

இதனிடையே, பெண்களுக்கான மரதன் மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் தேசிய சாதனைகளுக்கு சொந்தக்காரியான ஹிருனி விஜேரத்ன, இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், அதில் பெண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை சாதனையை முறியடிக்க காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வசித்து வரும் ஹிருனி விஜேரத்ன, 2017இல் முதற்தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்தார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<