மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

1280

இலங்கை மற்றும் மலேசிய தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இன்று (28) அறிவித்துள்ளது.  

நாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) சுசுகி கிண்ண கால்பந்து தொடரில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு, அத்தொடரின் பின்னர் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மலேசிய அணியுடனான மோதலுக்காக, தேசிய அணி வீரர்களுக்கான பயிற்சிகள் மீண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெத்தகான கால்பந்து பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த SAFF சுசுகி கிண்ண தொடரில் தமது முதல் போட்டியில் பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை வீரர்கள் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டனர். அடுத்து, மாலைத்தீவுகள் அணியுடனான மோதலை இலங்கை வீரர்கள் கோல்கள் ஏதும் இன்றி சமநிலையில் நிறைவு செய்தனர்.

எனினும், பி குழுவில் புள்ளிகள் மற்றும் கோல் வித்தியாசத்தில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் அணிகள் சமநிலையில் காணப்பட்டமையினால், அரையிறுதிக்கான அணியைத் தெரிவு செய்வதற்கு நாணய சுழற்சி முறைமை பயன்படுத்தப்பட்டது. அதில், மாலைத்தீவுகள் அணி வெற்றி பெற, அதிஷ்டமற்ற இலங்கை அணி தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.  

FA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் ….

இந்த வருட ஆரம்பம் முதல் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் வழிநடாத்தலில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற இலங்கை தேசிய அணி, பல முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது. குறிப்பாக, லிதுவேனிய அணியுடன் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற நட்பு ரீதியிலான போட்டியை சமநிலையில் (0-0 நிறைவுசெய்த இலங்கை வீரர்கள், பங்களாதேஷில் அந்நாட்டு அணியுடன் இடம்பெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தை 1-0 என வெற்றி கொண்டனர்.  

எவ்வாறிருப்பினும், கடந்த பல வருடங்களாக எந்தவித சர்வதேசப் போட்டிகளிலும் பங்கு பற்றாமல் இருந்து வந்த இலங்கை அணி, பிஃபாவின் தரவரிசையிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. எனினும், தற்பொழுது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ள இலங்கை அணி, ஒரு முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், நடைபெறவுள்ள மலேசிய அணியுடனான நட்பு ரீதியிலான போட்டி குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி,

”நாம் சாப் கிண்ணத் தொடரில் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வீரர்கள் தம்மால் முடியுமான முழு திறனையும் காண்பித்தனர். இதே நிலையுடன் நாம் மலேசிய அணியுடனான போட்டியையும் எதிர்கொளவோம்.  

சாப் கிண்ணத் தொடரின் பின்னர் ஓய்வில் இருக்கும் வீரர்களை மீண்டும் குறுகிய கால இடைவெளியில் அடுத்த போட்டிக்கு தயார் செய்வது சற்று கடினமானது. எனினும், எமது வீரர்கள் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு போட்டியை சிறந்த முறையில் எதிர்கொள்வார்கள் என நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.  

பசாலின் அபார கோலினால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

நாட்டில் உள்ள சிறந்த கால்பந்து வீரர்களை இனங்கண்டு, அவர்களை தேசிய அணிக்குள் உள்வாங்கி, பலமான இலங்கை அணியொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தில் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி தீவிரமாக உள்ளார்.

அந்த அடிப்படையில், தற்பொழுது இடம்பெற்று வரும் FA கிண்ண கால்பந்து தொடரில் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அணிகள் மோதிய பல ஆட்டங்களை பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அவ்வாறன போட்டிகளில் அடையாளம் காணப்பட்ட மேலும் சில வீரர்களும் அணியின் அடுத்த பயிற்சிகளில் இணையவுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பக்கீர் அலி, ”எமது திட்டம் நீண்ட காலத்தை இலக்காகக் கொண்டதாக உள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த வீரர்கள் தேசிய அணியில் உள்வாங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், அண்மைய FA கிண்ண போட்டிகளில் பிரகாசித்த பல வீரர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களும் தேசிய அணிக்கான பயிற்சிகளில் இணைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு நாம் பயிற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க