இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் வெளிநாட்டவர்கள்

828
Foreign cricketers in Sri Lanka

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும் உள்ளூர் முதல்தர கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட 9 பாகிஸ்தான் வீரர்களும், ஒரு இந்தியரும் ஒரு இங்கிலாந்து நாட்டவரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

இலங்கை மண்ணில் பிரகாசிக்கும் பாகிஸ்தானின் காஷிப் நவீத்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான..

  • நிக் கொம்ப்டன்

தென்னாபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இங்கிலாந்து வீரரான இவர், இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் விளையாட முதல்தடவையாக வந்திருக்கின்றார். இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்காக ஒப்பந்தமாகி இருக்கும் நிக், இங்கிலாந்து அணிக்காக இதுவரையில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு முதல்தரப் போட்டிகளில் 11,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருக்கின்றார்.  

  • சொஹைப் நசிர்

34 வயதாகும் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இவர் துறைமுக அதிகார சபை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இன்னுமொரு வீரர் ஆவார். பாகிஸ்தான் அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி இருக்கும் நசிர், டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களாக 177  ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. துறைமுக அதிகார சபை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை நசிர் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • ஆதில் மலிக்

பாகிஸ்தான் அணியின் சகலதுறை நட்சத்திரமான சொஹைப் மலிக்கின் சகோதரர் ஆதில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிலும் துறைமுக அதிகார சபை அணிக்காகவே விளையாடுகின்றார். வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் இங்கிலாந்து உள்ளூர் தொடரில் எசெக்ஸ் (Essex) அணிக்காக விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.

இம்முறை துறைமுக அதிகார சபை அணியை ஆதில் சுப்பர் 8 சுற்றுக்கு எடுத்துச் செல்வார் என நம்பப்படுகிறது. இதோடு ஆதில் T-20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களில் ஒருவர். 20 முதல்தர T-20  போட்டிகளில் ஆடியிருக்கும் இவர் 3 அரைச் சதங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

  • ஜகாங்கீர் மிர்சா

பதுரேலிய கழகத்துக்கு ஒப்பந்தமான மிர்சா, ஒரு வலதுகை துடுப்பாட்ட வீரர். 30 வயதாகும் இவர் இதுவரையில் 60 முதல்தரப் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு 4 சதங்களையும் பெற்றிருக்கின்றார். இதில் 135 ஓட்டங்கள் அதிகபட்சமாகும். பதுரேலிய அணிக்காக இரண்டு போட்டிகளில் மிர்சா இதுவரை விளையாடிய போதும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிக்காட்டத் தவறி இருந்தார்.

இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க

மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான..

  • நாசிர் மலிக்

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நாசிர் மலிக் 22.9 என்கிற சிறந்த சராசரியோடு 168 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அனுபவம் கொண்ட ஒருவர். பதுரேலிய அணிக்காக விளையாடும் 27 வயதான இவர் திலேஷ் புத்திக்கவுடன் இணைந்து இவரது தரப்பின் வேகப்பந்துவீச்சு துறையினை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.    

  • ரிஸ்வான் ஹைடர்

பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹைடர், செரசன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். 32 வயதாகும் ஹைடர் இதுவரை 64 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். செரசென்ஸ் அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் ஹைடர் விளையாடியுள்ளார்.  

  • ஆதிப் அலி

33 வயதாகும் ஆதிப், செரசன்ஸ் அணி ஒப்பந்தம் செய்த இரண்டாவது வெளிநாட்டு வீரர். 57 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கும் ஆடிப் 17 அரைச் சதங்களைப் பெற்றிருக்கின்றார். சோனகர் கழகத்துக்கெதிராக இலங்கை வந்து ஒரு போட்டியில் விளையாடியிருக்கும் ஆதிப், அதில் இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தமாக 28 ஓட்டங்களையே பெற்றிருக்கின்றார்.

  • காசிப் நவீட்

B மட்ட கழகங்களுக்கிடையிலான தொடரில் அனைவாரலும் தற்போது இரசிக்கப்படும் ஒரு வீரராக காசிப் நவீட் காணப்படுகின்றார். பாகிஸ்தானை சேர்ந்த இவர் இந்தப் பருவகாலத்திற்கான தொடரில் மூன்று போட்டிகளில் மாத்திரம் பங்கேற்று  550 இற்கு அண்மித்த  ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 2 அபார சதங்கள் மற்றும் 3 அரைச் சதங்கள் என்பவற்றினையும் விளாசியிருக்கின்றார்.  

தற்பொழுது 34 வயதாகும் வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் மூலம் பாணதுறை அணி இம்முறை சம்பியன் பட்டத்தினை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

5ஆவது கட்புலனற்றோர் உலகக்கிண்ணம் ஜனவரி 9 முதல் டுபாயில்

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள..

  • மொஹமட் ரமீஸ்

பாகிஸ்தான் கனிஷ்ட அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரமீஸ் பாணதுறை விளையாட்டுக் கழகத்துக்கு கிடைத்திருக்கும் ஏனைய பெறுமதி மிக்க வீரராவர். பாகிஸ்தானில் 44 உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 175 விக்கெட்டுக்களை அங்கே சாய்த்திருக்கின்றார். இலங்கையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ரமீஸ் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பதனால், பாணதுறை அணி இவர் மூலம் இன்னும் நன்மைகள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  • கோஹர் பாயிஸ்

காலி விளையாட்டுக் கழகத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பாயிஸ், வலதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 45 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வைத்திருக்கும் இவர் 141 விக்கெட்டுக்களையும் சாய்த்திருக்கின்றார்.   

  • வைபோர் யாதவ்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் யாதவ்வினை ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து விளையாட வந்திருக்கும் ஒரே வீரரான யாதவ், இலங்கையிலே தனது கன்னி முதல்தரப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 26 வயதாகும் யாதவ் கடற்படை அணிக்கெதிராக அரைச்சதம் ஒன்றினை விளாசியிருக்கின்றார்.