பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க

83

உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக இளம் வீரர்களை மாத்திரம் கொண்டு T20 தொடரில் வைட்வொஷ் வெற்றியினை பதிவு செய்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த வியாழக்கிழமை (10) தாயகம் திரும்பியிருந்தது. 

மாலிங்க ஓய்வு பெற்றால் தசுன் ஷானக்க தலைவராகலாம்

சர்வதேச T20 அரங்கிலிருந்து லசித் மாலிங்க…..

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயற்படும் ருமேஷ் ரத்நாயக்க இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 

ருமேஷ் ரத்நாயக்கவிடம் இலங்கை அணியின் பாகிஸ்தானில் செயற்பட்டது மகிழ்ச்சி தருகின்றதா? எனக் கேட்கப்பட்டிருந்தது.  அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

”பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்கள் எம்முடன் வரவில்லை. எனினும், நாம் தெரிவு செய்த அணி சிறந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தினால் அது எமது தொழிற்பாட்டினை இங்கு பாதித்திருக்கவில்லை.” 

இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாதுகாப்பு காரணங்கள் கருதி, இலங்கை அணியுடன் செல்லாமல் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறாக சிரேஷ்ட வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கை அணிக்கு, மிகப் பெரிய சவால்கள் இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக சாதித்தது எதிர்பார்க்காத விடயம் எனக் குறிப்பிட்டிருந்தார். 

”முதல் நாளிலிருந்து அங்கே இருக்கும் சவால்கள் பற்றி தெரிந்திருந்தது. இதனால், சவால்களை எதிர்கொள்வதே எமது முதல் இலக்காக இருந்தது. எனினும், வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி ஜொலித்திருந்தனர். இவ்வாறாக வீரர்கள் திறமையினை வெளிக்காட்டியது எங்களது கற்பனைக்கு எட்டாத விடயமாக இருந்தது.” 

இன்னும் ருமேஷ் ரத்நாயக்க இலங்கை அணிக்கு பாகிஸ்தான் மண்ணில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்ததோடு இந்த செயற்பாடு இன்னும் பல நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்துவிளையாட உந்துதலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 

”இது (இந்த சுற்றுப் பயணம் மிகவும் மிருதுவாக சென்றிருந்ததுடன், அது இங்கே வந்து ஏனைய அணிகளும் விளையாட உந்து சக்தியாக இருக்கும்.” 

”இந்த சுற்றுப் பயணம் அந்தவகையில், உலகத்திற்கு ஒரு செய்தியாக இருக்கின்றது.” 

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணிக்கு தீவிரவாத தாக்குதல்கள் நடாத்தப்பட்டதனால் அங்கே சர்வதேச கிரிக்கெட் அணிகள் சென்று விளையாட மறுத்திருந்தன. இந்நிலையில், இலங்கை அணியின் தற்போதைய சுற்றுப் பயணமே கடந்த நான்கு வருடங்களில் அங்கே இருவகைப் போட்டிகளுடன் இடம்பெற்ற முதல் இருதரப்பு தொடராக அமைகின்றது. 

அத்தோடு பாகிஸ்தான் தொடர், இலங்கை கிரிக்கெட் அணியிலும் எதிர்காலத்தில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி இருப்பதாக ருமேஷ் ரத்நாயக்க கூறியிருந்தார்.

”எமது அணியின் ஆட்டம் கிரிக்கெட் பார்வையாளர்கள் மத்தியிலும், எங்களது ரசிகர்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. எங்களது பாடசாலைகள் சிறந்த கிரிக்கெட்டிற்கான தொகுதியினை கொண்டிருப்பதுடன், இவ்வெற்றியிலிருந்து இளம் வீரர்களும் முன்னுதாரணத்தை எடுத்துக்கொள்வார்கள். இதனால், எங்களது வளர்ச்சியிலும் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியுமாக இருக்கும்.“

ஆஸி. தொடருக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதில் தலையிடி

பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடரில்…..

இன்னும் இலங்கை கிரிக்கெட் அணி, T20 போட்டிகள் மட்டுமல்லாது ஏனைய வகைப்போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

”நாங்கள் தொடர்ந்தும் சிறப்பாக செயற்படுவதனையே எதிர்பார்க்கின்றோம். இங்கே நாங்கள் வென்று விட்டோம். ஆனால், ஒரு பயிற்சியாளராக தொடர்ந்தும் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க என்ன செய்யப் போகின்றோம்? என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இது வெறும் T20 போட்டிகள் மாத்திரமே. இன்னும் இரண்டு வகைப்போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. எனவே, இதனை வைத்து நாம் சந்தோஷப்படக்கூடாது. ஆனால், நாம் இதிலிருந்து பாடங்கள் கற்று எமது மற்றைய வகைப்போட்டிகளிலும் முன்னேற முயற்சி செய்வோம்.”

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<