மீண்டும் ஆபிரிக்காவின் சிறந்த வீரரானார் முஹமட் சலாஹ்

169
CAF Awards Officail Twitter

எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்கள வீரருமான முஹமட் சலாஹ், தொடர்ந்து 2ஆவது முறையாகவும் ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   

இங்கிலாந்தின் உயரிய கால்பந்து விருதை வென்றார் சலாஹ்

லிவர்பூல் கால்பந்துக் ….

ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2018ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்றுமுன்தினம் (08) செனகலின் டாகார் நகரில் இடம்பெற்றது. இதில் ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடந்தாண்டின் சிறந்த வீரருக்கான விருதை முஹமட் சலாஹ் பெற்றுக் கொண்டார்.  

லிவர்பூல் சக வீரரும் செனகல் தேசிய கால்பந்தாட்ட அணியினது முன்கள வீரருமான சாடியோ மனே, மற்றொரு இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான ஆர்சனலினதும், கபோனினதும் முன்கள வீரரான பியரி எம்ரிக் அபுமெயாங்க் ஆகியோரைத் தாண்டியே குறித்த விருதை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சலாஹ் வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

அண்மைக்காலமாக கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற முஹமட் சலாஹ்வின் அபார ஆட்டத்தால் எகிப்து அணி கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த பருவத்தில் அபாரமாக விளையாடினார். இதனால், கடந்த வருடம் ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை முதன்முறையாக தட்டிச் சென்றார்.

இந்நிலையில், இரண்டாவது முறையும் விருதை வென்ற மொஹமட் சலாஹ் கூறுகையில் நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த விருதை பெற வேண்டும் என்பது கனவாக இருந்தது. தற்போது இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் அணி வீரர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இந்த விருதை எகிப்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடப்புச் சம்பியன் கொழும்பை சமன் செய்தது விமானப்படை

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (09) இடம்பெற்ற….

கடந்த பருவத்தில் இங்கிலாந்து முன்னணி கால்பந்து தொடரில் அதிக கோல்கள் பெற்று சாதனை படைத்த முஹமட் சலாஹ், கால்பந்து உலகின் சிறந்த வீரருக்காக வருடாந்தம் வழங்கப்படுகின்ற பெலான் டி ஓர் விருதுக்கு முன்மொழியப்பட்டதுடன், அதில் அவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

இதேவேளை, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) சிறந்த வீரருக்கான மூன்று வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் லிவர்பூல் அணிக்காக தனது கன்னிப் பருவத்திலேயே 44 கோல்களை பெற்ற சலாஹ் இடம்பெற்றிருந்தார். எனினும், சலாஹ்வை பின்தள்ளி லூகா மொட்ரிச் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

சலாஹ்வின் அபார ஆட்டத்தால் கடந்த பருவத்தில் லிவர்பூல் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை முன்னேறியபோதும் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவ்வணி, ரியல் மெட்ரிட்டிடம் கிண்ணத்தை பறிகொடுத்தது. அதேபோன்று, உலகக் கிண்ணத்திலும் அவரது எகிப்து அணி மோசமான தோல்விகளுடன் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டி ஏற்பட்டது.   

மெஸ்ஸியை முந்திய இந்திய வீரர் சுனில் செத்ரி

தற்போது கால்பந்து ஆடிவரும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் …

எனினும், பிஃபா விருது வழங்கும் விழாவில் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை சலாஹ் கைப்பற்றினார். 2017ஆம் ஆண்டு டிசம்பரில் எவர்டனுக்கு எதிரான போட்டியில் சலாஹ் பெற்ற கோல் சிறந்த கோலாக தெரிவானது.

அத்துடன், கடந்த வருடம் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுகளில் 3ஆவது இடத்தையும், பிரீமியர் லீக் 2017/18ஆம் பருவகாலத்திற்கான சுற்றுப் போட்டியில் தங்கப் பாதணி விருதையும் சலாஹ் வென்றமை குறிப்பிடத்தக்கது.

சலாஹ் ஏற்கனவே தொழில்முறை கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் கால்பந்து செய்தியாளர் சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது ஆகியவற்றையும் வென்றுள்ளமை அவர் உலக அளவில் தற்பொழுது முன்னணியில் உள்ள வீரர் என்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது.

  >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<