பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் கொழும்பில் திடீர் மரணம்

131

சிநேகபூர்வமாக ரக்பி போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (13) உயிரிழந்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது வீரர் இன்று மதியம் (16) உயிர் இழந்துள்ளார்.

பிரித்தானியாவின் டரம் மாநிலத்தின் க்லெம்ஸ் பைரட்ஸ் என்ற உள்ளுர் ரக்பி அணியின் வீரர்கள் இருவரே அவசர நோய் நிலமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி சிநேகபூர்வ ரக்பி போட்டியில் கலந்து கொள்வதற்காக 21 வீரர்களை கொண்ட ரக்பி குழாம் நாட்டிற்கு வருகை தந்தது.

கடந்த 12ஆம் திகதி கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியில் கலந்து கொண்ட பிறகு, அன்றிரவு நடைபெற்ற இராப்போசன நிகழ்விலும் அந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து, வீரர்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து, பின்னர், இரவு 10.30 மணயளவில் கொள்ளுப்பிட்டியிலுள்ள களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய நட்புறவு செவன்ஸ் : இலங்கை லயன்ஸ், இராணுவப்படை சம்பியன்

எவ்வாறாயினும் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பிய வீரர்களில் இருவர், மூச்சுத்திணறல் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அன்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய பெட் தோமஸ் ரீட் என்ற மற்றுமொரு இளைஞர் இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், உயிரிழந்த வீரர்களின் பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெற்ற நிலையில், மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மரணங்கள், காயம் அல்லது நோயினால் ஏற்பட்டது அல்ல எனவும் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையே இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி

எனினும், மேலதிக பரிசோதனைகளுக்காக குறித்த வீரர்களின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வீரர்களின் பிரேதங்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.