முஸ்பிகுர் ரஹீமில் குற்றம் பிடிக்கும் நோக்குடன் இல்லை: மொர்தஸா

1583
Mushfiqur Rahim
thesportsrush.com

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எட்டாவது மோதலாக அமைந்த நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியினை சுவைத்திருக்கின்றது.  

நியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் எட்டாவது மோதலாக இடம்பெற்ற ……

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டி ஒரு கட்டத்தில் மிகவும் இறுக்கமாக சென்ற காரணத்தினால் நியூசிலாந்து அணிக்கு வெற்றியினை பெறுவது என்பது சற்று கடினமாகவே இருந்தது. இதேநேரம், நியூசிலாந்து அணி இப்போட்டியின் ஆரம்பத்திலேயே சரிவு ஒன்றினை சந்திக்க ஒரு ரன்அவுட் வாய்ப்பும் காரணமாக அமையும் சந்தர்ப்பம் இருந்தது.

நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கைப்பற்ற, பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீமிற்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இந்த நிலையில் ரஹீமின் முழங்கை ஸ்டம்புகளை தவறுதலாக தட்டிவிட குறித்த ரன் அவுட்டிலிருந்து கேன் வில்லியம்சன் தப்பித்திருந்தார்.

போட்டியின் திருப்பு முனையாக அமைந்த இந்த சம்பவம் மூலம் பாதுகாக்கப்பட்ட கேன் வில்லியம்சன், தனது சக ஜோடியான ரொஸ் டெய்லருடன் இணைந்து நியூசிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டுகாக சத இணைப்பாட்டம் (105) ஒன்றை பகிர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இந்த இணைப்பாட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த இணைப்பாட்டம் குறித்து போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா இவ்வாறு குறிப்பிட்டார்.

“போட்டியின் திருப்பு முனையாக நான் நினைப்பது அந்த ரன் அவுட்டை தான், ஏனெனில் அப்போது தான் (கேன் வில்லியம்சன், ரொஸ் டெய்லர் ஆகிய) அவர்கள் இருவரும் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க தயாராகியிருந்தனர்.”

இதேநேரம், மஷ்ரபி மொர்தஸா இந்த ரன் அவுட் வாய்ப்பு மூலம்  விக்கெட் கைப்பற்றாமல் போனமைக்கு முஸ்பிகுர் ரஹீம் மீது பிழை பிடிக்க போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“முஷி மீது (முஸ்பிகுர் ரஹீம்), குற்றம் பிடிக்க வேண்டிய தேவை இல்லை என நான் நினைக்கின்றேன். குறித்த ரன் அவுட்டுக்கான (பந்து) எறி நேராக இருந்தது, ஒரு விக்கெட் காப்பாளராக அது நேராக வருமா,  இல்லையா என்பதை தீர்மானிப்பது கடினம். அவர் (முஸ்பிகுர் ரஹீம்) பந்தினை பிடிக்க முற்பட்ட வேளையில் முழங்கை (ஸ்டம்புகளை) அடித்து விட்டது. என நினைக்கின்றேன். இப்படியான தவறுகள் எப்போதும் நடைபெறுபவைகள் தான். எனவே, நாம் அவர் மீது குற்றம் பிடிப்பது தேவையற்றது என நினைக்கின்றேன். இது விளையாட்டில் ஒரு பகுதி. இது நடந்துவிட்டது. யாருமே இப்படியான தவறை செய்ய விரும்பமாட்டார்கள்.”

ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என புகழும் கோஹ்லி

நாங்கள் இந்தப் போட்டியில் அனைத்து…..

முஸ்பிகுர் ரஹீம் தவறவிட்ட ரன் அவுட் ஒருபுறமிருக்க, பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி இலக்காக சவால் குறைந்த 245 ஓட்டங்களையே நிர்ணயம் செய்தது. இந்த வெற்றி இலக்கினை எதிரணி வீரர்கள் பெறுவதை தடுப்பதில் பங்களாதேஷ் அணி சிறப்பாகவே செயற்பட்டதாக மஷ்ரபி மொர்தஸா தெரிவித்தார்.

“நாம் இன்று மோசமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை. நாம் இங்கே இருந்து சில நல்ல விடயங்களை எடுத்துக் கொள்வோம். 244 ஓட்டங்கள் பெற்றுவிட்டு, இந்த ஓவல் ஆடுகளத்தில் தடுப்பது என்பது இலகுவல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் இன்று மிக நெருக்கமாக வந்திருக்கின்றோம். கொஞ்ச ஓட்டங்களே குறைவாக இருந்தது. ஆனால் நாம் மிகவும் நெருக்கமாக வந்திருந்தோம்.”

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் ……

இதேநேரம் மொர்தஸா பங்களாதேஷ் அணி, உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டியில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

“அவர்கள் (இங்கிலாந்து) இந்த தொடரில் இருக்கும் மிகப் பெரிய அணிகளில் ஒன்றாக உள்ளனர். அது இலகுவாக இருக்க போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், மீண்டும் எங்களுக்கு எமது சிறந்த கிரிக்கெட்டை ஆட முடியும் எனில், உங்களுக்கு (போட்டி முடிவு எப்படி இருக்கும் என்பது) பற்றி தெரியாது. ஆனால் (போட்டி) கஷ்டமாக இருக்கும்.”

பங்களாதேஷ் அணி, அடுத்ததாக உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டி கார்டிப் நகரில் சனிக்கிழமை (8) ஆரம்பாகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<