ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியுடன் தன்னம்பிக்கை பெற்றுள்ள திமுத்

721

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நேற்று (21) நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆண்டு தொடர்ச்சியாக 8 ஒருநாள் போட்டிகளில் தோல்வி கண்டிருந்த இலங்கை அணிக்கு இது முதல் வெற்றியாகவும், 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதல் இருதரப்பு தொடர் வெற்றியாகவும் குறித்த வெற்றி பதிவாகியிருக்கிறது.   

பிரதீப்பின் அபார பந்துவீச்சோடு ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் தொடர் இலங்கை வசம்

Welcome to ThePapare Cricket Stats …..

உலகக் கிண்ண தயார்படுத்தலுக்காக ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, தங்களது வீரர்களை பரீட்சித்துக்கொண்டது. குறிப்பாக 2015ம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்காத திமுத் கருணாரத்னவுக்கு, தலைவர் என்ற அழுத்தத்தை விடவும், துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஆரம்பத்தில் அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்த திமுத் கருணாரத்ன, இறுதியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அரைச் சதத்தை கடந்து, தனது துடுப்பாட்டத்திற்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டார்.

இது குறித்து குறிப்பிட்ட திமுத் கருணாரத்ன, “நீண்ட நாட்களுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. நான் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு தடுமாறியதுடன், அழுத்தத்திற்கும் உள்ளானேன். எனினும், பின்னர் பந்துகளை சரியாக கணித்து துடுப்பெடுத்தாடியதுடன், எந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஓட்டங்களை வேகமாக பெறவேண்டும் என்பதை அறிந்துக்கொண்டேன்.  

இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக எனது இரண்டு ஆட்டமிழப்பு வாய்ப்புகள் எதிரணியால் தவறவிடப்பட்டன. அதனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டங்களை பெற்றுக்கொண்டேன். இவ்வாறு ஓட்டங்களை பெற்றதால், என்னிடம் தற்போது தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது”

அதேவேளை, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தடுமாறிய இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நேற்றைய போட்டியில் தனது முதலாவது ஒருநாள் அரைச் தத்தை கடந்து 74 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை ஏ அணியில் விளையாடுவதை புறக்கணித்த சந்திமால்

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற ………

“அவிஷ்க பெர்னாண்டோ அற்புதமான வீரர். அவருடைய திறமை எம் அனைவருக்கும் தெரியும். அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதுடன், நிதானமான இணைப்பாட்டத்தையும் கட்டியெழுப்பக்கூடிய வீரர். அவரிடமிருந்து என்ன தேவை என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். துரதிஷ்டவசமாக அவரால் சதத்தை பெற முடியவில்லை. ஆனால், உலகக் கிண்ணத்தில் அவரால் பெரிய சதம் ஒன்றினை பெறமுடியும் என நினைக்கிறேன்” என தன்னுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த இளம் துடுப்பாட்ட வீரர் குறித்து அணித் தவைர் திமுத் குறிப்பிட்டார்.

இலங்கை அணியை பொருத்தவரை நேற்றைய போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. முதல் விக்கெட்டுகாக 123 ஓட்டங்கள் பகிரப்பட்டன. எனினும், 33வது ஓவரில் கருணாரத்ன மற்றும் திசர பெரேரா ஆட்டமிழக்க, அஞ்செலோ மெதிவ்ஸும் குறுகிய நேரத்தில் ஆட்டமிழந்தார். எனினும், பின்வரிசை வீரர்கள், குசல் மெண்டிஸ் மற்றும் திரிமான்னே ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 322 ஆக உயர்த்தினர்.  

நாம் முழுமையாக 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடுவதற்கு திட்டமிட்டோம். துரதிஷ்டவசமாக திசர மற்றும் மெதிவ்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சற்று  தடுமாறினோம். எனினும், மெண்டிஸ் மற்றும் திரிமான்னே ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். விக்கெட்டுகள் கைவசம் இருந்தால், இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியும் என எண்ணினோம். ஆட்டத்தின் மத்திய பகுதியில் தடுமாறினாலும், கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொண்டோம்” என்றார்.

இலங்கை அணி கட்டுப்படுத்தக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தாலும், போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஸ்கொட்லாந்து அணிக்கு 235 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஸ்கொட்லாந்து அணிக்கு 7 ஓவர்களுக்கு 103 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. ஸ்கொட்லாந்து அணியை பொருத்தவரை சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், மைதானத்தின் ஈரத்தன்மையால் இலங்கை பந்து வீச்சாளர்கள் பந்து வீச தடுமாறினர். எனினும், நுவான் பிரதீப் சிறந்த கட்டுப்பாட்டுடன் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க

உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் ….

“ஸ்கொட்லாந்து வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தனர். நான் நுவான் பிரதீப்புடன் கலந்துரையாடினேன். அவரிடம் பௌன்சர் பந்துகளை வீசுமாறு கூறினேன். அதனை அவர் சிறப்பாக செய்தார். அத்துடன், மழை பெய்ததில் ஏற்பட்ட ஈரத்தன்மையால், பந்துகளை வீசுவதில் வீரர்கள் தடுமாறினர். இதில் யோர்க்கர் பந்துகளை வீசுவது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. ஆனால், நுவான் பிரதீப் சிறந்த கட்டுப்பாட்டுடன் யோர்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்ட நாயகனகவும் தெரிவானர். இந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தில் அவரால் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகிறேன்” என திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு, தங்களுடைய தொடர்ச்சியான தோல்விகளுக்கு ஸ்கொட்லாந்து அணியுடனான வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை வீரர்கள் முதலாவது உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கு முன்னர் எதிர்வரும் 24ம் மற்றும் 27ம் திகதிகளில் முறையே தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<