திக்வெல்ல தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி

4103

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு நிரோஷன் திக்வெல்ல தலைமை வகிக்கவுள்ளார். 

இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் பங்களாதேஷ் அணி இந்த பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பயிற்சிப் போட்டி பிரதான போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு 3 நாட்களுக்கு முன் எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும்.   

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை தசைப்பிடிப்பு உபாதை…

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 22 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெற்றிருக்கும் நிரோஷன் திக்வெல்ல உட்பட 10 வீரர்கள் இந்த பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த ஓஷத பெர்னாண்டோ மற்றும் அஞ்செலோ பெரேரா பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இந்த பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

தென்னாபிரிக்காவில் இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக சிறந்த திறமையை வெளிப்படுத்திய சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் உடன் இந்தியாவில் இலங்கை ‘A’ அணிக்காக சோபித்த பானுக்க ராஜபக்ஷ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய இருவரும் 15 பேர் கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.  

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம்

நிரோஷன் திக்வெல்ல (தலைவர்), தனுஷ்க குணதிலக்க, ஓஷத பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, அஞ்செலோ பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், தசுன் ஷானக்க, லஹிரு மதுஷங்க, வனிந்து டி சில்வா, அக்கில தனஞ்சய, அமில அபொன்சோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<