இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா

251

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்

விபத்தில் சிக்கிய SAG மெய்வல்லுனர் அணித் தலைவி நிமாலி

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய ………….

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்ப காலத்தில் ஒரு கூடைப்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்தார். எனினும், தனது நண்பர்களின் வேண்டுகோளின் படி அவர் கபடி விளையாட்டை தெரிவு செய்தார்.

சுமார் 6 அல்லது 7 வருடங்களாக அகில இலங்கை பாடசாலைகளில் கபடி சம்பியனாக வலம்வந்த ஹேனகம மத்திய கல்லூரி அணியை 2007 கம்பஹாவில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் கபடி போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி வீழ்த்தியது. இதில் சினோதரனும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மட்டக்களப்பு கபடி அணிக்கும், இலங்கை கடற்படை அணிக்கும் இடையில் வெபர் மைதானத்தில் சிநேகபூர்வ கபடி போட்டியொன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு கபடி அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சினோதரனுக்கு இலங்கை கடற்படை கபடி அணியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியது

அதே வருடம்தான் முதல்தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்துக்காகவும் அவர் விளையாடியிருந்தார்.

இதன்படி, 2010 முதல் இலங்கை கடற்படை கபடி அணிக்காக விளையாட ஆரம்பித்த சினோதரன், 2011இல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.  

அதே வருடம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதலாவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை கபடி அணியில் சினோதரன் முதல்தடவையாக இடம்பெற்றிருந்தார்.

SAG மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த சப்ரின், சண்முகேஸ்வரன் மற்றும் சபான்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ……….

இதனையடுத்து 2012இல் சீனாவில் நடைபெற்ற 3ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழா மற்றும் 2014 தாய்லாந்தில் நடைபெற்ற 4ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழக்களில் இலங்கை அணிக்காக விளையாடி சினோதரன், வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, .பி.எல் போட்டிகளைப் போல 2014ஆம் ஆண்டு முதல்தடவையாக இந்தியாவில் ஆரம்பமாகிய கபடி ப்ரீமியர் லீக் தொடரில் சினோதரன் பெங்களூர் புள்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவ்வாறான போட்டித் தொடரில் பங்குபற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

2014 முதல் 2018 வரை தொடர்ந்து 5 வருடங்கள் பெங்களூர் புள்ஸ் அணிக்காக விளையாடிய சினோதரனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவ்வருடம் நடைபெற்ற PRO கபடி லீக்கில் விளையாட முடியாமல் போனது

எனவே, இலங்கையின் தேசிய கபடி அணிக்காக சுமார் 9 வருடங்களாக விளையாடி வருகின்ற சினோதரன், 2ஆவது தடவையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார்.

விமலேந்திரன் டிலக்னா

இவ்வருடம் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதல்தடவையாக வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்ட வடக்கு மாகாண பெண்கள் கபடி அணியில் இடம்பெற்ற டிலக்னா, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை பெண்கள் கபடி அணியில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள டிலக்னா, மீசாலை கன்னியாஸ்திரி மட பாடசாலையின் பழைய மாணவியாவார்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் கரப்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடியிருந்தாலும், பிற்காலத்தில் கபடி விளையாட்டின் மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் இன்று நட்சத்திர கபடி வீராங்கனையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

2013 முதல் வட மாகாண அணிக்காக தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்று வருகின்ற டிலக்னா, இம்முறை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற வடக்கு மாகாண அணியிலும் இடம்பெற்றிருந்தார்

அத்துடன், கடந்த செப்டம்பர் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக தற்காப்புக்கலை சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை பெண்கள் கபடி அணியிலும் டிலக்னா இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இராசதுறை ப்ரியவர்னா

இவ்வருடம் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்ட வட மாகாண பெண்கள் கபடி அணியில் இடம்பெற்ற மற்றுமொரு வீராங்கனை தான் ப்ரியவர்னா. அவர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ப்ரியவர்னா, நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவி ஆவார். தரம் 9இல் இருந்து கபடி விளையாடி வரும் இவர், அந்தப் பாடசாலைக்காக 2013இல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் கபடியில் வெண்கலப் பதக்கத்தையும், 2017இல் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன், 2017இல் அதிசிறந்த கபடி வீராங்கனைக்கான விருதினையும் தட்டிச் சென்றார்.

சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன்

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ………….

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக தற்காப்புக்கலை சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை பெண்கள் கபடி அணியில் இடம்பெற்ற ப்ரியவர்ணா, முதல் தடவையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக களமிறங்கவுள்ளார்

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவில் 1999ஆம் ஆண்டு முதல்தடவையாக கபடி இணைக்கப்பட்டதுடன், இதில் இலங்கை ஆண்கள் கபடி அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. இதேநேரம் 2010ஆம் ஆண்டு இலங்கை பெண்கள் கபடி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இறுதியாக இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிக்கு வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொள்ள முடிந்தது.

அத்துடன் இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை ஆண்கள் அணியில் இடம்பெற்ற கே. சினோதரன், சி.ஆர் சமரகோன், கே.பி குருப்பு, எச்.ஆர் ஹபுதன்த்ரி, .எல் சம்பத் மற்றும் என்.சி குமார உள்ளிட்ட வீரர்கள் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளனர்

இலங்கை ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக இசுரு பண்டாரவும், உதவி பயிற்சியாளராக எல். ரத்னாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக இந்திக சனத் குமாரவும், உதவி பயிற்சியாளராக . விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அநுர பதிரன, இலங்கை அணியின் முகாமையாளராக செயற்படவுள்ளார்

ஆண்கள் அணி

கே. சினோதரன், சி.ஆர் சமரகோன், .டி ப்ரேமதிலக, கே.பி குருப்பு, ஜி.எம் சதுரங்க, டி.எம் புஷ்பகுமார, எம்.ஆர் திசாநாயக்க, என்.டி அபேசிங்க, . சஞ்சய, .எஸ் ரத்னாயக்க, ஜி. மதுஷங்க, சமீர ஹபுதன்த்ரி, கே.ஜி ஜயமால், .எல் சம்பத் மற்றும் என்.சி குமார

பெண்கள் அணி

பி.எம் ஹங்சமாலி, எம்.என்.டி விஜேதுங்க, ஜி.கே ஹேரத், பி.மதுஷானி, .டபிள்யு தமயந்தி, கே.எஸ் மனோதனி, பி.எம் சஞ்ஜீவனி, வி.திலக்னா, .எஸ் விஜேதுங்க, .எம் விஜேதிலக்க, ஜி.எஸ் புத்திகா, .டி காஞ்சனா, ஜி.கே.எம் மாதவி மற்றும் ஆர்.ப்ரியவர்னா

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<