தென்னாபிரிக்க டி20 அணியின் தலைவராக குயின்டன் டி கொக் நியமனம்

572

நிறைவுக்குவந்த 12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்ததைவிட மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி தங்களது அடுத்தகட்ட நகர்வாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகின்ற இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் மூவகையான கிரிக்கெட் தொடர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவ்வருடம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரும் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருமே நடைபெறவுள்ளது. 

பொதுநலவாய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும்…

இதே தொடரின் இறுதி தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மீண்டும் 2020 மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்து நடைபெறவுள்ள, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் குழாத்தினை பல அதிரடி மாற்றங்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

தென்னாபிரிக்க டி20 சர்வதேச குழாம்

கடந்த சில வருடங்களாக மூவகையான கிரிக்கெட் தொடர்களுக்குமான தென்னாபிரிக்க அணியின் தலைவராக பெப் டு பிளஸிஸ் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணி கடந்த உலகக்கிண்ண தொடரில் சந்தித்த பின்னடைவை தொடர்ந்து அணியின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

அதன்படி தென்னாபிரிக்க டி20 அணியின் புதிய தலைவராக 191 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட 26 வயதுடைய இளம் விக்கெட்காப்பாளரான குயின்டன் டி குக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 குழாமுக்கு மூன்று வீரர்கள் அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 

இறுதியாக 2017 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடிய, நீண்ட டெஸ்ட் அனுபவத்தை கொண்ட டெம்பா பவுமா, கடந்த மார்ச் மாதம் இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சர்வதேச அறிமுகம் கொண்ட வீரர்களுள் முதல் முறையாக டி20 சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணியை வீழ்த்த சில திட்டங்களை வைத்துள்ளோம் – திமுத்

நியூசிலாந்து அணியும் எமக்கு எதிராக…

ஏனைய வீரரான ஜோர்ன் போர்ச்சூன் எனப்படும் 24 வயதுடைய சகலதுறை வீரர் முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் டி20 குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் துடுப்பாட்டத்தில் 26 இன்னிங்ஸ்களில் 159 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 65 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் அண்மைக்காலமாக டி20 போட்டிகளில் கலக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெப் டு ப்ளெஸிசின் பெயர் டி20 தொடருக்கான குழாமில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் உபதலைவராக துடுப்பாட்ட வீரர் ரைஸ் வென் டர் டைஸன் நியமிக்கப்பட்டுள்ளார். 

டி20 தொடருக்கான 14 பேர் கொண்ட தென்னாபிரிக்க குழாம்

குயின்டன் டி குக் (அணித்தலைவர்), ரைஸ் வென் டர் டைஸன், டெம்பா பவுமா, ஜூனியர் டாலா, ஜோர்ன் போர்ச்சூன், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ட்ஜே, அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், ககிஸோ ரபாடா, தப்ரிஷ் ஷம்ஷி, ஜொன் ஜொன் ஸ்மட்ஸ்

தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதல் முறையாக கன்னி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளன. 

இந்திய பயிற்றுவிப்பாளருக்காக போட்டியிடும் ஆறு பேரின் விபரம் வெளியானது!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…

டி20 குழாமில் மூன்று வீரர்கள் அறிமுக வீரர்களாக அழைக்கப்பட்டிருப்பதை போன்று டெஸ்ட் குழாமிலும் மூன்று வீரர்கள் அறிமுக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதில் டி20 குழாமுக்கு அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ள பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே டெஸ்ட் குழாமுக்கும் அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார். 

விக்கெட் காப்பாளரான ரூடி சென்கென்ட் முதல் தர அனுபவம் பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச அணிக்கு அறிமுகம் பெறும் அடிப்படையில் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் 105 முதல் தர போட்டிகளில் 17 சதங்கள், 33 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 6,893 ஓட்டங்களை குவித்துள்ளார். 

மேலும் 25 வயதுடைய சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான செனுரன் முத்துசாமி மற்றுமொரு அறிமுக வீரராக முதல் முறையாக சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் 67 முதல் தர போட்டிகளில் துடுப்பாட்டத்தில் 3,375 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 128 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தர அறிமுகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்று 7 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் 2016 ஆம் ஆண்டுடன் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த 29 வயதுடைய சுழல் பந்துவீச்சாளர் டேன் பீட் அண்மையில் கழகங்களுக்கு இடையிலான தொடரில் பிரகாசித்துவந்ததன் மூலம் மீண்டும் சர்வதேச குழாமுக்கு திரும்பியுள்ளார். 

ஆஸி. அணியின் வலைப் பந்துவீச்சாளராக மாறிய UAE வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஏஷஸ்….

மேலும் இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றவாறு காணப்படும் 24 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் சுபைர் ஹம்ஸா மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் உபதலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். 

டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாபிரிக்க குழாம்

பெப் டு பிளெஸிஸ் (அணித்தலைவர்), டெம்பா பவுமா, தியூனிஸ் டி ப்ருயின், குயின்டன் டி குக், டீன் எல்கார், சுபைர் ஹம்ஸா, கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, லுங்கி ங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வேர்னன் பிளென்டர், டேன் பீட், ககிஸோ ரபாடா, ரூடி சென்கென்ட்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<