தென்னாபிரிக்காவுடனான வெற்றி: கிராண்ட்ஹோமுக்கு வில்லியம்சன் புகழாரம்

108
Getty image

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்காவுடனான வெற்றிக்கு துணைபுரிந்த கொலி டி கிராண்ட்ஹோமுக்கு நியூசிலாந்து அணித் தலைவர் புகழாரம் சூட்டினார்.

பேர்மிங்ஹமில் நேற்று (19) நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

புதிய ஒரு தென்னாபிரிக்க அணியை கட்டியெழுப்ப டு ப்ளெசிஸ் வேண்டுகோள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க …….

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, வென்டெர் துஸ்சென் மற்றும் ஹசிம் அம்லாவின் அரைச் சதங்களின் உதவியுடன் 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினை தனதாக்கியது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் வலுமிக்க ஒரு அணியாக திகழ்ந்து வரும் நியூசிலாந்து அணி, இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று கிட்டத்தட்ட அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், வெற்றிக்குப் பிறகு அணித் தலைவர் கேன் வில்லியம்சன் கருத்து கூறும்போது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் கொலின் டி கிராண்ட்ஹோமின் அபார ஆட்டம் தான். இதுதான் எமது வெற்றியின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அவர் ஆடுகளத்துக்கு முன் வந்து அற்புதமான முறையில் பந்தை துரத்தியடித்தார்.

உண்மையில் அவர் அபாரமாக விளையாடியிருந்தார். பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் தனது கடமையை சரிவர செய்து கொடுத்தார். இந்தப் போட்டியில் கடினமான பகுதிகளுக்கு பந்துகளை அடித்து ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். இதன்போது பல ஓட்டமற்ற பந்துகளையும் சந்திக்க நேரிட்டது” என வில்லியம்சன் கூறினார்.

இதேநேரம், தனது அபார ஆட்டம் குறித்து வில்லியம்சன் கருத்து வெளியிடுகையில், கிரான்ட்ஹோமுடன் சிறந்ததொரு இணைப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்தேன். விரைவாக ஓட்டங்களை எடுக்க முயற்சித்த போதிலும், களத்தடுப்பாளர்களை இனங்கண்டு ஓட்டங்கனை எடுத்தேன். என்னால் முடிந்தவரை அந்த வேலையைச் செய்ய முயற்சி செய்தேன். மேலும் இந்த வெற்றிக்கு இன்னும் சில வீரர்களும் பங்களிப்பு வழங்கியிருந்தமை இங்கு முக்கிய காரணியாக இருந்தது.

எமக்கு இணைப்பாட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. ஆனால், ஆரம்பத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். மேலும், தென்னாபிரிக்காவின் இறுக்கமான பந்துவீச்சும் எங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இவ்வாறான நிலைமைகளை சமாளித்து ஒரு வெற்றியைப் பெறுவது என்பது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.

நாணய சுழற்சியில் வென்றால் இரு அணிகளும் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய இருந்தன. இந்த ஆடுகளமானது சற்று மெதுவாக இருந்ததால் துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்தை வேகமாக அடித்தாடக் கூடியதாக காணப்பட்டது. மறுபுறத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது.

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய …..

அத்துடன், போட்டியின் முதல் பாதியில் நாங்கள் நல்லதொரு முயற்சியை எடுத்திருந்தோம் என்று நான் நினைத்தேன். சரியான இடத்தில் பந்தை வீசியிருந்தோம். எனவே எமது பந்துவீச்சு சிறப்பாக இருந்ததை பாதியிலேயே அறிந்தோம். அதேபோல தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களும் எமக்கு நெருக்கடியை கொடுத்திருந்தனர்.

எனவே, இதுபோன்ற சவால்மிக்க போட்டியொன்றில் அவர்களது பந்துவீச்சாளர்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றிபெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டார்.

இந்த வெற்றியுடன் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத அணியாக இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி உள்ளது. அதேவேளை, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இவ்வாறான போட்டித் தொடர்களில் வித்தியாசமான அணிகளை வித்தியாசமான ஆடுகளங்களில் சந்திக்க வேண்டிவரும். எனவே, சரியான திட்டங்களுடன் களமிறங்கினால் வெற்றி பெறுவதென்பது கடினமாக இருக்காது. அடுத்துவரும் போட்டிகளில் பலம் பொருந்திய அணிகளை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

நியூசிலாந்து அணி தமது அடுத்த லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் சனிக்கிழமை (22) எதிர்கொள்கிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<