காலிறுதிப் போட்டியில் புனித மைக்கல் கல்லூரி கூடைப்பந்து அணி அபாரம்

145

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மட்டக்களப்பு கூடைப்பந்து சம்மேளனம் (BDBA) ஒழுங்கு செய்த 14 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான அழைப்பு கூடைப்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் யாவும் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

நாடு பூராகவும் இருந்து 12 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்த இந்த கூடைப்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் அனைத்தும் கடந்த சனிக்கிழமை (2) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (3) ஆகிய நாட்களில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி கூடைப்பந்து மைதானம், சிவானந்த கூடைப்பந்து மைதானம் மற்றும் மியானி கூடைப்பந்து அரங்கு என்பவற்றில் நடைபெற்ற நிலையில் காலிறுதிப் போட்டிகள் யாவும் ஞாயிற்றுக்கிழமை (3) மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அரங்கில் மாத்திரம் இடம்பெற்றது.

இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற ஆஸி.

தொடரின் முதல் காலிறுதியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணியும், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் மோதின. முதல் காலிறுதிப் போட்டியின் நான்கு கால்பகுதிகளிலும் ஆக்ரோஷம் காண்பித்த புனித மைக்கல் கல்லூரி அணி, குறித்த கால்பகுதிகள் அனைத்தையும் 23-04, 14-02, 16-02, 25-01 எனக் கைப்பற்றி முடிவில் 78-09 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்ப்பாண இளம் வீரர்களை தோற்கடித்தது. மேலும், இந்த வெற்றியுடன் புனித மைக்கல் கல்லூரி அணி தொடரின் அரையிறுதியில் விளையாடும் முதல் அணியாகவும் மாறியது.

இதேநேரம் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் கொழும்பு வெஸ்லி கல்லூரி அணியும், திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி அணியும் களம் கண்டன. இந்த காலிறுதிப் போட்டியில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி அணி 42-33 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு வெஸ்லி கல்லூரி அணியை தோற்கடித்து அரையிறுதியில் விளையாடும் இரண்டாவது அணியாக மாறியது.

அதேவேளை தொடரின் மூன்றாவது காலிறுதியில் கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியினரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி எதிர்கொண்டிருந்தது. இரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்புக்களோடு மோதியிருந்த இந்த காலிறுதிப் போட்டியில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணி ஆரம்பம் தொடக்கம் ஆதிக்கம் செலுத்தியது.

இதனை அடுத்து தொடர்ந்தும் போட்டியில் ஆதிக்கத்தை முன்னெடுத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியினர் போட்டியின் நான்கு கால்பகுதிகளையும் 16-02, 09-04, 07-04, 08-02 எனக் கைப்பற்றி 40-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர். மேலும், இவ்வெற்றியோடு யாழ்ப்பாண இந்துக்கல்லூரி அணி தொடரின் அரையிறுதியில் விளையாடும் மூன்றாவது அணியாக மாறியது.

இவற்றை அடுத்து தொடரின் இறுதிக் காலிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரி அணியும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் மோதின. விறுவிறுப்பின் உச்சத்தை அடைந்த இந்தப் போட்டியில் வெறும் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரி அணி 60-54 என கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும் கடைசி அணியாக தெரிவாகியிருந்தது.

அழைப்பு கூடைப்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் யாவும் இன்று (4) மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இறுதிப் போட்டியும் அரையிறுதிப் போட்டிகளை அடுத்து இடம்பெறுகின்றது.

தலை உபாதை பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ள குசல் பெரேரா

இத்தொடரின் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<