தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் புனித மைக்கல் கல்லூரிக்கு மூன்றாமிடம்

650
Batticaloa St. Michael's secure 3rd place

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த 19 வயதுக்குட்பட்ட ‘B’ பிரிவு (B – Division) பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியும் மூன்றாம் இடத்திற்கான போட்டியும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நேற்று (31) நடைபெற்றிருந்தது.

இம்முறை வெபர் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய மட்டக்களப்பு அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு…

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியும் மோதியிருந்ததோடு இறுதி ஆட்டத்தில் நுகேகொடை லைசியம் கல்லூரியும், ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும் பங்கேற்றிருந்தன.

புனித மைக்கல் கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி

மேலதிக நேரம் வழங்கப்பட்டிருந்த விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 68:63 என்கிற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி ஸாஹிரா கல்லூரியினை வீழ்த்தியிருந்தது. ஸாஹிரா அணியின் தலைவர் யூசுப் 34 புள்ளிகளை தனது அணிக்காக சேர்த்து போராட்டத்தினை காட்டியிருந்த இதேவேளையில், புனித மைக்கல் கல்லூரியின் தாக்குதல் வீரரான திலுக்ஷன் 15 புள்ளிகளை சேர்த்து மட்டக்களப்பு வீரர்களை வலுப்படுத்தியிருந்தார்.

போட்டியின் ஆரம்பத்தில் மைதானத்தில் தமக்கு கிடைத்த இடைவெளிகளின் மூலம் புள்ளிகளை சேர்த்து புனித மைக்கல் கல்லூரியினர் போட்டியின் முதற்பாதியில் முன்னிலை அடைந்து கொண்டனர். துரிதகதியிலான செயற்பாடுகள் மூலம் ஸாஹிரா கல்லூரியினரும் மைக்கல் வீரர்களை முதற்பாதியில் நெருங்கியிருந்தனர். இப்பாதியில்  எதிரணியினை விட புள்ளிகளை அதிகரித்துக்கொள்ள ஸாஹிராவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருந்த போதிலும் அவற்றினை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ளத் தவறியிருந்தது.

போட்டியின் இரண்டாம் பாதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்களை வீழ்த்த தேவையான புள்ளிகளை மட்டக்களப்பின் இளம் வீரர்கள் சேர்த்திருந்தனர். எனினும், போட்டியின் இறுதிக் கால்பகுதியில் இந்த முன்னிலையினை அவர்களுக்கு நீடிக்க முடியாமல் போயிருந்தது.

இறுதி கால்பகுதியில், திருப்பு முனையான ஆட்டத்தினை ஏற்படுத்திய ஸாஹிரா கல்லூரி போட்டியின் புள்ளிகளை மைக்கல் வீரர்களுடன் சமப்படுத்தியிருந்து.  இரண்டு அணிகளும் இறுதிக் கால்பகுதியில் தங்களுக்கிடையே அழுத்தங்கள் கொடுத்துக்கொண்டதால் எவராலும் போட்டியில் வெற்றி பெற முடியாது போக 54:54 என்கிற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் சமநிலை அடைந்தது.

விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம்

நேற்று நிறைவடைந்த பாடசாலை…

இதனால்,போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க மேலதிக நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் சில நிமிடங்கள் ஸாஹிரா கல்லூரி ஆதிக்கம் செலுத்தியிருந்த போதிலும், பந்தின் கட்டுப்பாட்டை பெற்றுக்கொண்ட புனித மைக்கல் கல்லூரியினர் அரைவட்டத்திற்குள் இருந்து தாம் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மூலம் ‘B’ பிரிவு பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டவர்களாக மாறியிருந்தனர்.

முழு நேரம்புனித மைக்கல் கல்லூரி 68 – 63 ஸாஹிரா கல்லூரி

இந்தப் போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்திருந்த புனித மைக்கல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர், எங்களுக்கு இப்போட்டி சிறந்ததாகவும், சற்று கடினமானதாகவும் அமைந்திருந்தது. எனினும், எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். அதோடு நாம் முதற்தடவையாக மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் இத்தொடரில் பங்கேற்கின்றோம். இதைவைத்துப் பார்க்கும் போது எமது அணி மூன்றாம் இடத்தினைப் பெற்றது மகிழ்ச்சியே.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

லைசியம் கல்லூரி எதிர் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை

முதற்பாதிக்கு கிட்டவாக வரை நடைபெற்றிருந்த தொடரின் இந்த இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. தொடரின்  இந்த இறுதிப் போட்டி நடைபெறவிருக்கும் நாளும் பிறகு அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.