இலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்

226

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் மிகவும் கோலகலமாக நடைபெற்று வருகின்ற 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் கபடி போட்டிகளில் பதக்கம் பெறும் கனவுகளோடு இலங்கையின் ஆடவர், மகளிர் கபடி அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

தற்போது ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான கபடி போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் குழு A இன் சார்பில் இலங்கை ஆண்கள் கபடி அணியும், மகளிர் கபடி அணியும் மோதுகின்றன.

ஆசிய விளையாட்டு விழா டென்னிசில் ஷர்மல், அனிக்கா இரண்டாவது சுற்றுக்கு தகுதி

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது ஆசிய…..

ஞாயிற்றுக்கிழமை (19) கருடா அரங்கில் ஆரம்பமான கபடி போட்டிகளில் மகளிருக்கான பிரிவில் தமது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கபடி அணி, 15-41 என்கிற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மோசமான ஆரம்பத்தினை காட்டியிருந்தது.

மறுமுனையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கபடி போட்டிகளின் நடப்பு சம்பியனான இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் கபடி அணி, தொடக்கத்தில் முன்னிலையுடன் காணப்பட்டது.  

பின்னரும் இந்தியாவுக்கு அழுத்தங்கள் தந்த போதிலும், இந்தியாவின் பதில் தாக்குதல் ஆட்டம் காரணமாக இறுதியில் 44-28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியினை தழுவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என இலங்கையின் இரண்டு கபடி அணிகளுக்கும் கபடி தொடரின் முதல் நாள் சிறப்பாக அமைந்திருக்கவில்லை.

எனினும், கபடி போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய நாளில் (20) தம்முடைய முதல் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கபடி அணி தமது எதிர்த்தரப்பை 17-34 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்தது.

இதன்பின்னர், இடம்பெற்ற ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி மெதுவான ஆரம்பத்தை தந்த போதிலும் ஜப்பான் மங்கைகளை 22-17 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்து இரண்டாவது வெற்றியினையும் பதிவு செய்தது.

தாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை

இந்தோனேசியாவின் ஜகர்த்தா – பலேம்பேங்கில் நடைபெற்று வரும் ……

ஜப்பான் மகளிர் கபடி அணியுடனான வெற்றியுடன் இலங்கை மகளிர் கபடி அணி, முதல் நாளில் தோல்வியினை தழுவியிருந்த போதிலும் இரண்டாம் நாளினை இரண்டு வெற்றிகளுடன் நிறைவு செய்து கொண்டது.

ஜப்பான் அணியுடனான போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை மகளிர் கபடி அணித்தலைவி நிமாஷ  கோகிலா, தமது வீராங்கனைகள் எதிர்பார்த்ததை விட அபாரமாக விளையாடி வெற்றியினைப் பெற்றுத்தந்ததாக குறிப்பிட்டதோடு ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் ஒன்றை பெற்றுத் தருவோம் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

மறுமுனையில், உலகில் நான்காம் நிலையில் காணப்படும் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் கபடி அணி, முழு ஆதிக்கத்தோடு தாய்லாந்தை 46-29 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்து தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்தது.

இனி, கபடி தொடரில் நாளை இலங்கை மகளிர் அணி இந்தியாவையும், ஆண்கள் கபடி அணி பங்களாதேஷினையும் எதிர்கொள்ளவிருக்கின்றன. இதேவேளை, இந்திய மகளிர் கபடி அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.