ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்?

1630

கிரிக்கெட் இரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளாக்கியிருக்கும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது அத்தியாயம் நாளை (15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின்றது.  

புதிய அணியாக, புதிய சவாலாக ஆசிய கிண்ணத்தை சந்திக்கும் இலங்கை

இம்முறை ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றுகின்ற அணிகளை ஒருபோதும் குறைத்து

இம்முறைக்கான தொடரில் ஆசியாவில்பலம் வாய்ந்த ஆறு அணிகள் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு  மோதல்கள்  இடம்பெறவுள்ளதோடு  தொடரின்  முதல்  போட்டியில்  குழு B  இல்காணப்படும்  இலங்கை அணி,  பங்களாதேஷுடன் பலப்பரீட்சை  நடாத்துகின்றது. நாளை நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியின் முன்னோட்டமே இது.

போட்டியின் விபரம்

இலங்கை எதிர் பங்களாதேஷ் (குழு B)

இடம்துபாய் சர்வதேச மைதானம், துபாய்

திகதி, நேரம்செப்டம்பர் 15 (சனிக்கிழமை), மாலை 5 மணி (இலங்கை நேரப்படி)  

  • இரு அணிகளதும் கடந்தகாலம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் புதிய அத்தியாயம் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெறுவதால், இலங்கைபங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கடந்த கால ஒரு நாள் பதிவுகளை முதலில் நோக்குவோம்.  

இரண்டு அணிகளும் இதுவரையில் 44 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளதோடு, அவற்றில் 6 போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்க இலங்கை அணி 36 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றது. இந்த பதிவுகள் கடந்த காலத்தில் இரண்டு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் ஆதிக்கம் உச்ச அளவில் இருந்தது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை

இதேநேரம் ஆசியக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றை எடுத்து நோக்கும் போது, இலங்கை அணியினர் கடைசியாக ஒரு நாள் போட்டிகளாக 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக நாமம் சூடியிருந்தனர். இதேவேளை, ஐந்து தடவைகள் ஆசியக் கிண்ணத்தை வென்றிருக்கும் இலங்கை ஒரு நாள் போட்டிகளாக இதுவரையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றிகளை (34) பதிவு செய்த ஆசிய அணியாகவும் இருக்கின்றது.

இதேவேளை ஆசியக் கிண்ணத்தை இதுவரையில் ஒரு தடவையேனும் வெல்லாத பங்களாதேஷ் அணி 2012 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடராக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதே அவர்களின் சிறந்த பதிவாக உள்ளது. அதோடு ஒரு நாள் தொடராக  இதுவரையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணியினர் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றியினை பதிவு செய்துள்ளனர்.

  • இரு அணிகளதும் நிகழ்காலம்

2017 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான தோல்விகளால் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்த இலங்கை அணி, தற்போது அதிலிருந்து வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வருகின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணியினர், அண்மையில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரை 3-2 என பறிகொடுத்த போதிலும் அத்தொடரில் பல நேர்மறையான (Positive) விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் தமது வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வரும் இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ணத் தொடர் பெரிய சவால்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கத்துக்குட்டி என்ற அந்தஸ்தில் இருந்து விடுபட்டு இன்று திருப்புமுனையான ஆட்டங்கள் மூலம் போட்டிகளில் வெற்றிபெறும் பங்களாதேஷ் அணிக்கு, இந்த ஆண்டு அவ்வளவு பிரகாசமாக அமையாது போயிருப்பினும் அவர்கள் தாம் இறுதியாக பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு நாள் தொடரினை 2-1 என கைப்பற்றி மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இலங்கை அணி போன்று பங்களாதேஷ் அணியும் இங்கிலாந்தை சேர்ந்த புதிய பயிற்சியாளர்  ஸ்டீவ் ரோட்ஸின் ஆளுகையின் கீழ் பங்குபற்றும் பெரிய தொடராக ஆசியக் கிண்ணப் போட்டிகள் அமைகின்றன.

ThePapare Tamil weekly sports roundup – Episode 45

Uploaded by ThePapare.com on 2018-09-12.

எனவே, புதிய பயிற்சியாளர் ஒருவரின் கீழ் பல்வேறு புதிய வியூகங்களை பரீட்சித்து  பார்க்க நினைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

  • அச்சுறுத்தும் காயங்கள்

இப்போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளையும் பாதிக்கும் முக்கிய காரணியாக வீரர்களின் உபாதை உள்ளது.

இலங்கை அணி, ஆசியக் கிண்ணத் தொடருக்காக  ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாக முன்னர் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தினேஷ் சந்திமால் விரல் உபாதை ஒன்றினால் அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக நிரோஷன் திக்வெல்ல இணைத்துக்  கொள்ளப்பட்டிருந்தார்.

இதேநேரம், நேற்று (13) முதுகு உபாதை ஒன்றின் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் பயணித்திருந்த இலங்கை அணியில் இருந்து தனுஷ்க குணத்திலக்கவும் விலக, அவருக்கு பதிலாக ஷெஹான் ஜயசூரிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். இப்படி உபாதைகள் காரணமாக அண்மைய நாட்களில் திறமையினை வெளிப்படுத்திய இரண்டு முக்கிய வீரர்களை இலங்கை இழப்பது பின்னடைவான ஒரு விடயமாகும்.

பங்களாதேஷ் அணியினை எடுத்து நோக்கினால் அவ்வணியின் நட்சத்திர வீரர்களான சகீப் அல் ஹசன், தமிம் இக்பால் மற்றும் சுழல்பந்து வீச்சாளர் நஷ்முல் ஹொஸ்ஸைன் ஆகியோரும் தமது விரல்களில் ஏற்பட்ட  உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மூவரும்  இலங்கையுடனான போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது. எனினும், வீரர்களின் உபாதைகள் தமது அணியின் செயற்திறனை குறைத்து விடாது என பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலேத் மஹ்முட் தெரிவித்திருந்தார்.

  • இரு அணிகளதும் வீரர்கள்

வீரர்கள் காயம் ஒரு பக்கம் இருந்த போதிலும் இரண்டு அணிகளும் திறமையான வீரர்களினால் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் தமிம் இக்பால், சகீப் அல் ஹஸன், மஹ்மதுல்லாஹ், முஸ்பிகுர் ரஹீம் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றோர் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்காக போராடக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

ஆசிய கிண்ண குழாத்திலிருந்து வெளியேறும் தனுஷ்க குணதிலக

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள

இலங்கை அணி காயம் காரணமாக அனுபவமிக்க தினேஷ் சந்திமாலை இழந்த போதிலும் திசர பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சுரங்க லக்மால் மற்றும் லசித் மாலிங்க போன்றோரினை தமக்காக வைத்திருப்பது மிகப் பெரிய அனுகூலமாகும்.

  • எதிர்பார்ப்பு வீரர்கள்

தமிம் இக்பால் (பங்களாதேஷ்): பங்களாதேஷ் அணியின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒருவராக உள்ளார். பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்ற தமிம் இக்பாலின் துடுப்பாட்டம் பிரதான காரணியாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட தொடரில் தமிம் இரண்டு சதங்களை (130* & 103) விளாசியிருந்ததோடு அவர் சதம் விளாசிய அந்த இரண்டு போட்டிகளிலும் வென்றே பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரினை கைப்பற்றியது.

தமிமின் அனுபவமும் திறமையும் கைகொடுக்கும் எனில், இலங்கை அணியுடனான போட்டியினை பங்களாதேஷ் இலகுவாக வென்று விட முடியும். ஆனால், இவை அனைத்தையும் செய்ய விரல் உபாதையை எதிர் நோக்கியிருக்கும் தமிம் இக்பால் பூரண உடற்தகுதியினை நிரூபித்து நாளைய போட்டியில் ஆட வேண்டும்.

லசித் மாலிங்க (இலங்கை): நாளைய பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் மாலிங்கவுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு இரசிகரும் இரசிக்கும் வீரராக அவர் இருப்பார். இலங்கை அணிக்காக நீண்ட காலமாக விளையாடாது போயிருந்த அவருக்கு திறமையினை நிரூபித்து அடுத்த உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பினை இந்த ஆசியக் கிண்ணத் தொடர் ஏற்படுத்தி தந்திருக்கின்றது.

மெதுவாக வீசப்படும் யோக்கர் பந்துகள் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்யும் மாலிங்க மீது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

  • மைதான நிலைமைகள்

துபாய் மைதானத்தில் நாளை போட்டி நடைபெறும் நேரம் மிகவும் உஷ்ணமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதோடு போட்டியில் இரண்டு அணிகளினாலும் அதிக ஓட்டங்கள் குவிக்க முடியும் எனவும், பந்துவீச்சு சுழல் வீரர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அணிக் குழாங்கள்

பங்களாதேஷ்

மஷ்ரபி மொர்தசா (அணித் தலைவர்), சகீப் அல் ஹஸன், லிடன் தாஸ், அரிபூல் ஹக், மொமினுல் ஹக், அபு ஹைடர், ருபெல் ஹசன், தமிம் இக்பால், நஷ்முல் இஸ்லாம், மஹ்மதுல்லாஹ், மெஹிதி ஹஸன் மிராஸ், மொஹம்மட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான், மொசாதிக் ஹொசைன், நஷ்முல் ஹொசைன்

இலங்கை

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அமில அபொன்சோ, துஷ்மந்த சமீர, அகில தனன்ஞய, நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், தில்ருவான் பெரேரா, குசல் பெரேரா, திசர பெரேரா, கசுன் ராஜித, தசுன் சானக்க, தனன்ஞய டி சில்வா, உபுல் தரங்க

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க