பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனரில் 5,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்பு

104

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும் இணைந்து நான்காவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

தரம் 3, தரம் 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டுத்துறை ஆர்வத்தை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.   

Photo Album : Sri Lanka Schools Kids Athletics Championships – Press Conferences

அந்த வகையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட முன்னோட்டப் போட்டிகளில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் தகுதிபெற்ற 5,184 மாணவர்கள் இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்ற தகுதியினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் நாடாளாவிய ரீதியிலிருந்து தெரிவாகிய தரம் 3ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும், தரம் 4ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும், தரம் 5ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

வேடிக்கை (Fun), உடற்தகுதி (Fitness), தாங்கிக் கொள்ளும் சக்தி (Fundamental), நட்பு (Friendship) உள்ளிட்ட (Four F Concept) விடயங்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் நடத்தல், ஓடுதல், சுழல்தல் மற்றும் எறிதல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன், இதில் தனி நபர் குழுக்கள் மற்றும் கலப்பு போட்டிகளாக இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதேநேரம், 2015இல் இந்த மெய்வல்லுனர் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட போது சுமார் 5500 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் சுமார் 6,000 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கல்வி அமைச்சு நீக்கியதைத் தொடர்ந்து இதுவரை 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 7 போட்டிச் சாதனைகளும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் எட்டு போட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும், கடந்தவருடம் வலய மட்டப் போட்டிகளை நடத்த தவறியதால் அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபெறும் வாய்ப்பை தவறவிட்ட ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் இம்முறை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பில் நெஸ்லே லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் சம்பியனுக்கு வழங்கப்படவுள்ள கிண்ணத்தை கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரதிப் பணிப்பாளர் அதுல விஜேவர்தன, கல்வி அமைச்சின் செயற்றிட்ட அதிகாரி மில்ரோய் ஜயமான்ன, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை விசேட ஆலோசகர் சுனில் ஜயவீர ஆகியோரிடம் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே கையளித்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<