ஒரே நாளில் 2 தேசிய சாதனைகள், 3 போட்டிச் சாதனைகள்

210

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக் கொண்டு தேசிய குழாமுக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராக நேற்று தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமான 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆம் நாள் போட்டிகள் இன்றைய தினமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ் வீராங்கனை அனீத்தா ஜெகதீஸ்வரன் மற்றும் ஆண்களுக்கான டெகத்லனில் (10 வகை போட்டி) அஜித் குமார கருணாதிலக ஆகியோர் புதிய தேசிய சாதனை நிகழ்த்தினர். அத்துடன், பெண்களுக்கான 1,500 மீற்றரில் கயன்திகா அபேரத்ன மற்றும் பெண்களுக்கான குண்டு போடுதலில் தாரிகா பெர்ணான்டோ மற்றும் ஆண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டலில் எம்.எஸ் புஷ்பகுமார ஆகியோர் புதிய போட்டிச் சாதனையும் நிகழ்த்தினர்.

டெகத்லனில் அஜித் குமார புதிய மைல்கல்

மெய்வல்லுனர் அரங்கில் 10 வகைப் போட்டிகளைக் கொண்டதாக (100 மீற்றர், 110 மீற்றர் தடை தாண்டல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், குண்டு எறிதல், 400 மீற்றர், பரிதி வட்டம் எறிதல், கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல், மற்றும் 1,500 மீற்றர்) நடைபெறுகின்ற டெகத்லனில் நடப்புச் சம்பியனான இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அஜித் குமார கருணாதிலக 7,000 புள்ளிகளைப் பெற்று குறித்த போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் தொடரில் 6919 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்யின்ஷிப் போட்டித் தொடரில் 6,724 புள்ளிகளைப் பெற்று போட்டிச் சாதனையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனித்தா புதிய தேசிய சாதனை

95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய தேசிய சாதனை படைத்தார். அவர் குறித்த போட்டியில் 3.47 மீற்றர் உயரம் தாவி நிறைவு செய்ததுடன், இம்முறை போட்டித் தொடரில் தேசிய சாதனை படைத்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.

மீண்டும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினா அனித்தா

அவர் குறித்த போட்டியில் 3.47 மீற்றர் உயரம் தாவி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய…

1,500 மீற்றரில் கயன்திகா புதிய போட்டிச் சாதனை

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கயன்திகா அபேரட்ன, 4 நிமிடங்கள் 20.64 செக்கன்களில் ஓடி முடித்து தங்கம் வென்றார். இதன்மூலம், 3 வருடங்களுக்குப் முன்னர் அதே போட்டியில் அவரால் நிகழ்த்தப்பட்ட (4 நிமிடங்கள் 21.00 செக்கன்கள்) போட்டிச் சாதனையை அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சம்பிகா தில்ருக்ஷி, போட்டியை 4 நிமிடங்கள் 20.92 செக்கன்களில் நிறைவு செய்து தனது சிறந்த தனிப்பட்ட காலத்தைப் பதிவு செய்ததுடன், 2 நிமிடங்கள் 21.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இலங்கை இராணுவ வீராங்கனையான நிலானி ரத்னாயக்க 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், இப்போட்டித் தொடரின் முதல் கட்டத்தில் பங்குபற்றிய கயன்திகா அபேரட்ன, 2 நிமிடங்கள் 03.78 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற 2ஆவது கட்டப் போட்டிகளில் அவர் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் முதல் நாளில் கிழக்கு வீரர்கள் அபாரம்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 95ஆவது…

 இந்நிலையில் 2ஆவது கட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கையின் மற்றுமொரு வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, இப்போட்டியிலும் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 06.30 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

குண்டு போடுதலில் தாரிக்கா சாதனை

பெண்களுக்காக குண்டு போடுதலில் இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட தாரிக்கா பெர்ணாந்து 14.52 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார்.

முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த டி முத்துநாயக்க, 14.50 மீற்றர் தூரம் எறிந்து நிகழ்த்திய சாதனையை சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு தாரிக்கா முறியடித்துள்ளார். 2012இல் அந்த சாதனையை நிகழ்த்திய முத்துநாயக்கவுக்கு இம்முறை போட்டித் தொடரில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், அவர் குறித்த போட்டியில் 12.62 மீற்றர் தூரம் எறிந்தார்.

3,000 மீற்றர் தடைதாண்டலில் புஷ்பகுமாரவின் சாதனை

ஆண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எம்.எஸ் புஷ்பகுமார, 13 வருடங்களுக்குப் பிறகு புதிய போட்டிச் சாதனை படைத்தார். குறித்த போட்டியை 8 நிமிடங்கள் 52.19 செக்கன்களில் நிறைவு செய்து அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனரில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.பி மெண்டிஸ், குறித்த போட்டியை 8 நிமிடங்கள் 55.07 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.