இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்து படைத்த “93 நிமிடங்கள்”

1038

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு நேற்றைய நாள் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியிருந்தது. ஏனெனில், உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணியொன்று  பாய்த்தரையில் (Matting) வழமையாக கிரிக்கெட் விளையாடும் ஒரு மூன்றாம் நிலை அணி போன்று செயற்பட்டு சுழல் பந்துவீச்சில் முன்னேற்றகரமாக இருக்கும் ஒரு அணியிடம் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு நிலைமை இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் காணப்பட்டிருந்தது. 

இந்த டெஸ்ட்டில் இலங்கை அணியின் திறமையான செயற்பாட்டினால் தென்னாபிரிக்க அணியின் கதை மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட்டது. இதனால், தென்னாபிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியிருக்கும் இரண்டு நாட்களுக்கு காலியில் முகாம் ஒன்றை அமைத்து அடுத்த போட்டியில் சுழல் பந்துகளினை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள முடியும்.

மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்…….

இலங்கை அணிக்கு இந்த போட்டியின் கதாநாயகனாக மாறியது தில்ருவான் பெரேரா ஆவார். தில்ருவான் பெரேரா ஒரு சிறிய புன்னகையை மாத்திரம் காட்டி எதிரணியினை துவம்சம் செய்ததோடு மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் யாருக்கும் தெரியாமல் தனது சிறந்த பந்துவீச்சினையும் பதிவு செய்திருக்கின்றார்.

இப்போட்டியில் மொத்தமாக 78 ஓட்டங்களை விட்டுத்தந்து 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் அவர், இரண்டாவது தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார். இதற்கு முன்னர் தில்ருவான் பெரேரா 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணியுடன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலாகும். இதற்கு அவர் 99 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு பெரேரா இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்து டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் தனது சிறந்த பந்துவீச்சினையும் காட்டியிருந்தார்.

தில்ருவான் கடந்த மாதங்களில் மிகவும் கடுமையாக உழைத்திருந்தார். இதன் பிரதிபலனாகவே அவரினால் இன்று சிறப்பாக பந்துவீச முடிந்தது. தில்ருவானும், ரங்கனவும் போட்டியினை முழுமையாக மாற்றிவிட்டனர்.“ என தான் அணித்தலைவராக செயற்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கையை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய சுரங்க லக்மால் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணியின் இரண்டு நாள்…….

ரங்கன ஹேரத்தும், தில்ருவான் பெரேராவும் தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்த மாறி மாறி உழைத்திருந்தனர். ஒரு கணத்தில் தில்ருவான் பெரேரா விக்கெட்டுக்களை சாய்க்க தென்னாபிரிக்கா ஓட்டங்கள் பெறுவதை ரங்கன ஹேரத் கட்டுப்படுத்தினார். அதே நேரம், ரங்கன ஹேரத் விக்கெட்டுக்களை கைப்பற்றும் போது தென்னாபிரிக்க அணி ஓட்டங்கள் பெறுவதை கட்டுப்படுத்தும் வேலை தில்ருவான் பெரேராவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியாக இருவரும் மாறி மாறி அணியின் வெற்றிக்கு உழைத்திருந்தனர்.

அதோடு இந்த இரண்டு சுழல் வீரர்களுக்கும் 116 வருடகாலம் பழமை வாய்ந்த சாதனை ஒன்றினை சமன் செய்வதற்கான வாய்ப்பு ஒன்றும் கிடைக்க இருந்தது. ஆனால், லக்ஷான் சந்தகனும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் விக்கெட் ஒன்றினை சாய்த்ததனால் அது இல்லாமல் போயிருந்தது. டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மாற்றங்கள் ஏதுமின்றி எதிரணியின் 10 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்ததே அந்த சாதனையாகும்.

அதேநேரம் இந்த இருவரும், டெஸ்ட் போட்டியொன்றின் ஒவ்வொரு இன்னிங்ஸினதும் பந்துவீச்சினை ஆரம்பித்த நான்காவது சுழல் ஜோடியாகவும் மாறியிருந்தனர். ஹேரத்தும் தில்ருவானும் ஒருவருக்கொருவர் எதிரணியினை பாரபட்சம் பார்க்காமல் தங்களது பந்துவீச்சு மூலம் சிதைத்திருந்தனர். இதன் காரணமாகவே மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தில் ஒரு இடைவெளி மீதமிருக்க முன்னரே தென்னாபிரிக்க தோல்வியினை சந்தித்தது.

ரங்கன (ஹேரத்) உலகில் இருக்கும் இடதுகை சுழல் வீரர்களில் சிறந்த ஒருவர். இந்த விடயத்தில் எந்த கேள்விக்கும் இடமில்லை.  தில்ருவானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றார். அவர்கள் இருவரும் உலகின் தலை சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களாக இந்த தருணத்தில் விளங்குகின்றனர். விசேடமாக காலியினை எடுத்தால், எங்களுக்காக அவர்கள் பல போட்டிகளில் வெற்றிகளை பெற்றுத்தந்திருக்கின்றனர். எனக்கு அவர்கள் இப்போது செய்திருக்கும் நல்ல வேலையை தொடர்ச்சியாக செய்வார்கள் என்னும் நம்பிக்கை இருக்கின்றது.” என சுரங்க லக்மால் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில் அதனது இரண்டாவது இன்னிங்ஸில் 116 நிமிடங்கள் மட்டுமே துடுப்பாடியது. இதில் முதல் பாதி விக்கெட்டுக்கள் ஏதுமின்றி 13 நிமிடங்களுடன் முடிந்தது. இதனை அடுத்து மதிய போசனத்திற்கு பின்னரான 103 நிமிட ஆட்டத்தில் 12.50 மணியளவில் இரண்டாம் இன்னிங்ஸில் தமது முதல் விக்கெட்டாக டீன் எல்காரை பறிகொடுத்த தென்னாபிரிக்கா மதியம் 2.23 மணியளவில் இறுதி விக்கெட்டாக தப்ரைஸ் சம்சியினையும் பறிகொடுத்தது. அந்தவகையில் 93 நிமிடங்களுக்குள்ளேயே தென்னாபிரிக்கஅணியின் அனைத்து விக்கெட்டுக்களும் வீழ்ந்திருந்தன.

குறித்த போட்டியின் போது 352 என்கிற ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியினர், இலக்கு சவாலானது என்பதை கூட கருதாது மோசமான துடுப்பாட்ட முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களும் இதன் காரணமாகவே பறிபோயிருந்தன. அதோடு போராடும் விதமாக வகையில் எந்தவொரு வீரரும் தென்னாபிரிக்க அணியில் துடுப்பாட தவறியிருந்தனர்.

நாங்கள் எதிர்பார்த்த அளவு நன்றாக இருக்கவில்லை. இங்கே எமக்கு கடினமான நிலை உருவாகும் என்பதனையும் எதிர்பார்த்திருந்தோம். எங்களுக்கு இலங்கை அணியின் சுழல் வீரர்கள் அவர்களது சொந்த (நாட்டு) நிலைமைகளில் மிகச் சிறப்பாக செயற்படுவார்கள் என்பது தெரிந்த விடயமே. நாம் அந்தளவுக்கு ஈடுகொடுக்கவில்லை. எனவே, இந்த தொடரில் சிறந்த மோதல் ஒன்றை மேற்கொள்ள நாம் இன்னும் எம்மை சிறந்ததாக ஆக்குவது தேவையாக உள்ளது. நாம் அதனை செய்யவிட்டால் இலங்கை எம்மை விட சிறந்ததாக ஆகி விடும்.“ என தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் பேசியிருந்தார்.

தென்னாபிரிக்க அணிக்கு மூன்று நாட்களில் முடிந்த இலங்கை அணியுடனான இந்த டெஸ்ட் போட்டி அவர்களது டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை நிர்மூலம் செய்ததும், கிரிக்கெட் விளையாட்டுக்கான அவர்களது மனநிலையை (Temperament) கேள்விக்கு உள்ளாக்கியதும்  வடுக்களை ஏற்படுத்தியிருக்கும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இப்போட்டியின் ஆட்ட நாயகனான திமுத் கருணாரத்ன மாத்திரமே இரண்டு அணிகளிலிருந்துமிருந்தும் சதம் ஒன்றினையும், அரைச்சதம் ஒன்றினையும் ஒரேயொரு வீரராக பெற்றிருந்தார். அந்த வகையில் கருணாரத்ன இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களினையும் குவித்திருந்தார். இதன்படி இப்போட்டியில் கருணாரத்னவின் மொத்த ஓட்டங்கள் (218) தென்னாபிரிக்க அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் (126&73) மொத்தமாக பெற்றுக் கொண்ட ஓட்டங்களை விட 19 ஓட்டங்கள் அதிகமாகும்.

நீங்கள் சுழல் பந்துவீச்சுக்கு ஆடுவீர்களாயின் உங்களுக்கு கட்டாயமாக தடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். எனினும், இதனைவிட நீங்கள் சுழல்பந்து வீச்சாளர்களை அவர்கள் உங்களை ஆக்கிரமிக்க முன்னர் நீங்கள் அவர்களை ஆக்கிரமித்து விட வேண்டும். இதுதான் சுழல் வீரர்களை எதிர்கொள்வதில் இருக்கும் முக்கிய அம்சமாகும். நீங்கள் அவர்களுக்கு உங்களை ஆக்கிரமிக்க ஒரு வாய்ப்பினை தரும் போது அவர்கள் உங்களை விட ஒரு அடி முன்னதாகவே இருப்பார்கள்.

எனவே, நான் எனது பாதங்களை பயன்படுத்துவதை தடுக்க, என்னால் முடிந்தளவு ஓட்டங்கள் சேர்க்க வாய்ப்புக்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதாவது நான் என்ன செய்தேன் என்றால், எனக்கு ஓட்டங்கள் பெறுவதற்கு எங்கு வசதியாக இருக்கின்றதோ அதனை செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் துடுப்பாட நிற்கும் இடத்தில் உங்களால் அசைவுடன் ஒரு துணிகர செயலினை மேற்கொள்ள முடியும் எனின், பந்துவீச்சாளர்களை உங்களுக்கு தேவையான இடத்தில் பந்தினை வீச வைக்க முடியும். “ என்று பேசிய திமுத் கருணாரத்ன தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களை காலி அரங்கில் எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பில் ஒரு சிறு விளக்கத்தை வழங்கியிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<