பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிறிஸ் கெய்ல்

94
Image Courtesy - Getty image

கிரிக்கெட் உலகின் சிக்ஸர் மன்னர் என அழைக்கப்படுகின்ற மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான கிறிஸ் கெய்ல், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தனது அபரிமிதமான ஆட்டத்தை மீண்டும் முழு உலகிற்கும் நிரூபித்துக் காட்டினார்.

39 வயதான கிறிஸ் கெய்ல், கடந்த 1999 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். சுமார் 20 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் அவர், சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி-20 கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்கவில்லை.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில்…….

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டார்.

எனினும், அப்போது இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கிறிஸ் கெய்ல், இங்கிலாந்துடனான 4 ஆவது ஒருநாள் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனது ஓய்வின் முடிவை பிற்போடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கெய்ல், முதலாவது ஒருநாள் போட்டியில் 129 பந்துகளில் 135 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரர் சஹீட் அப்ரிடியின் சாதனையை அவர் முறியடித்தார். சர்வதேச போட்டிகளில் அப்ரிடி 476 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை கிறிஸ் கெய்ல் முறியடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்தார். 3 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 4 ஆவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 162 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியில் 14 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல், பிரையன் லாராவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்த 2 ஆவது மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். அத்துடன், குறித்த போட்டியுடன் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஒட்டுமொத்தமாக 500 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரராகவும் இடம்பிடித்தார். இதுவரை 98 டெஸ்ட் மற்றும், 306 ஒருநாள் மற்றும் 104 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 506 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதேநேரம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நாளில் இருந்து ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டுவதற்கு நீண்டகாலம் (19 வருடங்கள், 169 நாட்கள்) எடுத்துக் கொண்ட வீரராகவும், வயது முதிர்ந்த வீரராகவும் (39 வருடங்கள், 160 நாட்கள்) இடம்பிடித்தார்.

கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த இலக்கை தனது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 77 ஓட்டங்களை குவித்தார்.

அத்துடன், இந்தப் போட்டியில் தனது 51 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை 19 பந்துகளில் பெற்றுக்கொண்ட அவர், மேற்கிந்திய திவுகள் அணி சார்பாக குறைந்த பந்துகளில் ஒருநாள் அரைச்சதத்தைக் கடந்த முதல் வீரராகவும் இடம்பெற்றார்.

திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடும் ……..

அத்துடன், இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 39 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்ல், இரு நாடுகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். மேலும், ஒரு தொடரில் வீரர் ஒருவரினால் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான்.

மேலும், இங்கிலாந்துடனான நான்கு போட்டிகளில் விளையாடிய கிறிஸ் கெய்ல், 106 என்ற சராசரியுடன் 424 ஓட்டங்களைக் எடுத்து போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

இந்த சாதனை குறித்து போட்டியின் பிறகு பேசிய கிறிஸ் கெய்ல், மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இதுவே எனது கடைசி ஒருநாள் தொடர். அதனால், ரசிகர்களுக்கு விருந்து படைக்க நினைத்தேன். தொடர் முழுவதும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஜமைக்கா ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான அனுபவத்தை அளிக்கக் கூடியது. ரசிகர்கள் எப்பொழுதும் நமக்கு ஊக்கமளித்துக்  கொண்டே இருப்பார்கள்.

மேற்கிந்;திய தீவுகள் அணியின் ஜேர்ஸியை அணிந்து கொண்டு சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மிகச்சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. நான் சமீபத்தில் பங்கேற்ற டி-20 தொடர்களில் பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிக்கவில்லை. ஆனால், இந்தத் தொடரில் மீண்டும் எனது பழைய விளையாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த மண்ணில் இதுதான் எனது சிறப்பான ஆட்டம் என நினைக்கிறேன்.

நான் சிறப்பாக விளையாடுவது குறித்தோ, சிக்ஸர்கள் விளாசுவது குறித்தோ ஆச்சரியப்படவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது இயல்பாகவே வருவது. டி-20 தொடர்களில் நான் நிறைய சிக்ஸர்கள் விளாசியிருக்கிறேன். ஆனால், ஒருநாள் தொடரில் இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். 39 வயதில் 39 சிக்ஸர்கள் அடித்ததை பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

மேலும், 10,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டியது மிகப் பெரிய சாதனை தான். நான் டி-20 இலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளேன். மேற்கிந்திய தீவுகளுக்காக இந்த சாதனையைச் செய்வது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இங்கிலாந்தை 113 ஓட்டங்களுக்கு சுருட்டி தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து அணியை 113 ஓட்டங்களுக்கு …….

உடலுக்கு என்னவாயிற்று? எனக்கு 40 வயது நெருங்கி விட்டது. ஓய்வு அறிவிப்பை கைவிடலாமா? பார்ப்போம், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்வேன் என சூசகமாக தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடருக்கு முன் கிறிஸ் கெய்ல் 9672 ஓட்டங்களை அடித்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா 10348 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த மேற்கிந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

லாராவின் சாதனையை முறியடிக்க கிறிஸ் கெய்லுக்கு 678 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள், உலகக் கிண்ணத்தில் 9 லீக் ஆட்டங்கள் என மேற்கிந்திய தீவுகளுக்கு 14 இன்னிங்ஸ் இருந்தன. இதில் 678 ஓட்டங்களை அடித்து லாராவின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல் உடன் கிறிஸ் கெய்ல் ஓய்வு பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தற்போது 4 போட்டியிலேயே (ஒரு ஆட்டத்தில் விளையாடவில்லை) 347 ஓட்டங்களைக் குவித்துவிட்டார். இன்னும் 10 போட்டிகளில் 330 ஓட்டங்களை மட்டுமே அடித்தால் லாராவின் சாதனையை முறியடித்து விடலாம். இதனால் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக டெஸ்ட் ஓட்டங்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பட்டியலில் பிரையன் லாரா முதல் இடத்தில் உள்ளார். லாராவை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைக்க உள்ளார்.

சதத்தின் மூலம் பல சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோஹ்லி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று …..

சிக்ஸர் சாதனைத் துளிகள்

சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி 476 சிக்ஸர் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை கிறிஸ் கெய்ல் முதலாவது ஒருநாள் போட்டியில் முறியடித்தார். ஒட்டுமொத்தாக அப்ரிடியைக் காட்டிலும் ஒரு சிக்ஸர் மேலதிகமாக 477 அடித்து அந்த சாதனையை அவர் குறித்த போட்டியில் முறியடித்தார்.

சஹீட் அப்ரிடி தனது 476 சிக்ஸர்களை 524 போட்டிகளில் அடித்தார். ஆனால் கிறிஸ் கெய்ல் 477 சிக்ஸர்களை 444 போட்டிகளில் அடித்துள்ளார்.

அதிக சிக்ஸர்கள் அடித்தவரிசையில் அப்ரிடிக்கு அடுத்தாக நியூசிலாந்து வீரர் பிரெண்டம் மெக்கலம்(398), இலங்கையின் சனத் ஜயசூரியா(352), இந்தியாவின் ரோஹித் சர்மா(349) மற்றும் டோனி(348) ஆகியோர் உள்ளனர்.

அத்துடன், இந்த ஒருநாள் தொடரில் கிறிஸ் கெயில் ஒரு அணிக்கு எதிராக 10 சிக்ஸர்கள் அடிப்பது இது நான்காவது முறையாகும். முதல் போட்டியில் 12 சிக்ஸர்களையும், 4ஆவது ஒருநாள் போட்டியில் 14 சிக்ஸர்களையும் அவர் அடித்துள்ளார். இதற்கு முன்பு, ஜிம்பாப்வே (2015), ஐக்கிய அரபு இராச்சியம் (2018) ஆகிய அணிகளுக்கு எதிராக 10 சிக்ஸர்களை கிறிஸ் கெய்ல் அடித்துள்ளார்.

இவருடன், 10 சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ், நியூசிலாந்தின் மார்டின் கப்டில், இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

ஒரு அணிக்கு எதிராக 100 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக இதுவரை 3 வகையான போட்டிகளையும் சேர்த்து 129 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 34 ஒருநாள் போட்டிகளில் 84 சிக்ஸர்கள், 12 டி-20 போட்டிகளில் 11 சிக்ஸர்கள், 20 டெஸ்ட் போட்டிகளில் 15 சிக்ஸர்களை கிறிஸ் கெய்ல் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் இதுவரை டி20 போட்டிகளில் 105 சிக்ஸர்களும், ஒருநாள் போட்டியில் 303 சிக்ஸர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<